Skip to main content

“உசுரை வெறுத்துதான் இந்த ஆபத்தான வேலைக்கு வந்திருக்கிறோம்” - வேதனை குரலில் அரசுக்கு கோரிக்கை வைக்கும் இரண்டு பெண்கள்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

"We have come to this dangerous job because we hate to live" - two women in a painful voice demanding the government
                                                              கலையரசி

 

தென்காசி மாவட்டத்தின் தொழில் நகரமான சங்கரன்கோவில் பகுதியில் ஒரு தகவல் விசயமாக நாம் சென்றுகொண்டிருந்தபோது நகரின் ஒதுக்குப்புறத்திலுள்ள உயரமான ட்ரான்ஸ்ஃபார்மரின் அருகே நின்றிருந்த சிலர் அதன் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்தவர்களை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நமக்கும் பொறி தட்ட, தற்செயலாக மேலே பார்த்தபோதுதான் ட்ரான்ஸ்பார்மரின் உச்சியில் 2 இளம்பெண்கள் மின்வயர் இணைப்பு பணியை அநாயாசமாய் செய்துகொண்டிருந்ததைப் பார்த்த நமக்கு வியப்பு தாங்கவில்லை. ஆண்கள் மட்டுமே ஈடுபடும் இந்த மின்சாரம் சம்பந்தப்பட்ட தொழிலில் அவர்களுக்கு இணையாக 2 பெண்கள் அந்தரத்தில் மின் இணைப்பு பணியை செய்துகொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நாம், அவர்கள் வேலையை முடித்துவிட்டு கீழே இறங்கும்வரை காத்திருந்தோம். சில மணித்துளிகளில் வேலையை முடித்தவர்கள், சரசரவென்று இறங்கி ட்ரான்ஸ்ஃபார்மரில் மின் சப்ளையைக் கொடுத்துவிட்டு நின்றிருந்த அந்த இரண்டு இளம்பெண்களிடமும் நாம் பேசினோம்.

 

அந்தரத்தில் ஆண்களே செய்யத் தயங்கும் இந்த மின்இணைப்பு பணியைத் துணிச்சலாக நீங்கள் செய்தது சாலையில் சென்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. எந்தச் சூழ்நிலையில் அபாயகரமான இந்தப் பணிக்குப் நீங்கள் வர நேர்ந்தது என்று கேட்டபோது, அவர்கள் வெளிப்படுத்திய பின்னணி வெலவெலக்க வைத்தது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் கலா பார்வதி மற்றும் கலையரசி. வாழ்க்கைச் சூழலின் விளிம்புநிலை பிரிவைச் சேர்ந்த அந்த இரண்டு இளம்பெண்களும் எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர்கள். இவர்களில் கலா பார்வதியின் தாய் ராமு. தந்தை 6 வருடங்களுக்கு முன்பே காலமாகியிருக்கிறார். இவரோடு பிறந்த 5 பேர்களும் வாழ்க்கையில் செட்டிலாகி வெவ்வேறு பகுதியில் இருப்பவர்கள். 6 வருடங்களுக்கு முன்பு திருமணமான கலா பார்வதி, கணவனுடன் 3 வருடங்கள் மட்டுமே குடித்தனம் நடத்தியிருக்கிறார். அதன் பிறகு கணவன் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுக்க, அதன் காரணமாக கணவரைப் பிரிந்துவந்த கலா பார்வதியை அவரது தாயும் உடன் பிறந்தவர்களும் ஏற்க மறுத்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பியிருக்கிறார்கள். ஒண்டியாய் வெளியே வந்த கலா பார்வதிக்கு வாய்க்கும் கைக்கும் போராட்டம். வறுமையை சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். 

 

"We have come to this dangerous job because we hate to live" - two women in a painful voice demanding the government
                                                             கலா பார்வதி

 

இந்தச் சூழலில் கோவில்பட்டி மின்சாரத்துறை, கேங்க்மேன் பணிகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்தது. துணிச்சலாக அந்தப் பணிக்குச் சென்றிருக்கிறார் கலா பார்வதி. அங்கு ஆண்களே அதிகமாக வர, பெண்கள் 5 பேர் மட்டுமே வந்திருக்கின்றனர். அந்த சமயம் 30 அடி உயரமுள்ள மின் கம்பத்தில் ஏறுகிற சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் 5 பெண்களில் கலா பார்வதி மட்டுமே வெற்றிபெற, அடுத்து நடத்தப்பட்ட வயர் மடக்கும் பணியை குறிப்பிட்ட 30 நொடிகளுக்குள் செய்து முடிக்க முடியாமல் போகவே அவர் வெளியே வர நேர்ந்தது. இந்தச் சூழலில்தான் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த கலையரசி என்கிற திருமணமாகாத இளம் பெண்ணும் கலா பார்வதியுடன் இணைந்திருக்கிறார். திருமணமாகாத கலையரசியின் உடன்பிறந்தவர்கள் இருவரும் வாழ்க்கையில் செட்டிலாகி வெளியூரில் இருப்பவர்கள். தந்தை மரணமடைந்துவிட, வயதான தாய் கனகராணியை கவனிக்க வேண்டிய இக்கட்டானச் சூழ்நிலையில் இருந்தவர் கலையரசி. வருமானத்திற்கு வழி இல்லாத நிலையில் குடும்ப வறுமையைச் சமாளிக்க தீப்பெட்டி வேலைக்குப் போன கலையரசிக்கு அந்த வருமானம் கட்டுபடியாகவில்லை. இந்த நிலையில்தான் கலா பார்வதியுடன் இணைந்த கலையரசி, நகரிலுள்ள மின்சாரத்துறை காண்ட்ராக்டர் ஒருவரிடம் வயர் மேன் வேலைக்குப் போயிருக்கிறார்கள். 

 

அந்த சமயம் கோவில்பட்டி இ.பி.யைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இவர்கள் மின் கம்பத்தில் சரசரவென்று ஏறுவதைப் பார்த்து வியந்து, மின் தொடர்பான பணியில் ட்ரெய்னிங் எடுங்கள் என்று ஊக்கப்படுத்தியிருக்கிறார். ஆறே மாதத்தில் மின்சாரம் தொடர்பான கேங்மேன் மற்றும் வயர் மேன் பயிற்சியை இரண்டு பெண்களும் கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். அதையடுத்து அந்த இ.பி. காண்ட்ராக்டர் மூலமாகவே அவர் எடுக்கிற இ.பி.யின் காண்ட்ராக்ட் பணியில் வயர்மேனாக ஈடுபட்டிருக்கிறார்கள். புதிய மின்கம்பம் நடுவது, ட்ரான்ஸ்ஃபார்மர்களின் உச்சியில் மின் வயர் இணைப்புப் பணிகளைச் செய்வது ஆகியவற்றை திறமையாக செய்திருக்கிறார்கள். 25 முதல் 30 அடி உயரம் வரையுள்ள மின் கம்பத்தில் அநாயாசமாக ஏறி அந்தரத்தில் மின் இணைப்பு பணியைத் அசத்தலாகச் செய்திருக்கிறார்கள். இதையடுத்தே இரண்டு பெண்களும் இ.பி.யின் 3 வருடத்திற்கான ஒப்பந்தப் பணியாளரானார்கள். புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைப்பது, உயர்ந்த மின்கம்பத்தில் வயர் இணைப்பு கொடுப்பது போன்ற பணிகளைப் பழுதின்றிச் செய்திருக்கிறார்கள். ஒப்பந்தப் பணியாளர்கள் என்றாலும் இவர்களின் தினக்கூலி 300 ரூபாய்தான். அதற்காகவே இத்தனை பெரிய ரிஸ்க்கான வேலையில் ஈடுபட நேர்ந்திருக்கிறது. 3 வருட ஒப்பந்தப் பணியில் 6 மாதத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் புதிப்பிக்கப்படுமாம். ஆனாலும் இந்தப் பணியின் கடைசி மூன்று மாத சம்பள பாக்கியும் வர வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

 

"We have come to this dangerous job because we hate to live" - two women in a painful voice demanding the government

 

மின் இணைப்புப் பணியில் ஆண்களுக்கு நிகராவும் அதே சமயம் வேலையை ஆண்களைவிட இவர்கள் வெகு விரைவாகச் செய்வதையறிந்த கோவில்பட்டி, கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட அக்கம்பக்கம் நகரங்களிலிருக்கும் இ.பி. சப்ஸ்டேஷன்கள் தங்கள் பகுதியின் ஊழியர்கள், வயர்மேன்கள் பற்றாக்குறை காரணமாக கலா பார்வதியையும், கலையரசியையும் வரவழைத்து ஒப்பந்தப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். இதுபோன்று மின்துறையின் பணிகள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே கிடைக்க நேரிடும். ஆனாலும் தங்களின் வயிற்றுப்பாடு காரணமாக மின்சாரத்துறை அழைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்திருக்கிறார்கள். கடந்த நான்கு வருட அனுபவத்தில் வயர் மேன் தொழிலில் ஆண் பணியாளர்களையும் மிஞ்சும் அளவிற்குத் தேர்ந்த வயர்மேன் பணியாளராகியிருக்கிறார்கள்.

 

“வரதட்சணை விவகாரத்தால் கணவரைவிட்டு வெளியே வந்ததேன். என் தாய் உட்பட உடன்பிறந்தவர்களால் புறக்கணிக்கப்பட்டேன். சமூகத்தில் அநாதையானேன். வறுமை, அரை அங்குல இதயத்தையும், அறையடி வயிற்றையும் வளர்க்க வேண்டுமே. அதற்காக அரும்பாடுபட்டேன். நான் பட்ட அசிங்கங்களை நினைத்தால் எனக்குக் கண்ணீர் முட்டுகிறது. யாரிடமும் கையேந்தக் கூடாது. சுயமாக வேலை பார்க்க வேண்டும் என்ற வெறியால்தான், உயிரை வெறுத்து இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளேன். ஹெவி லோடு ட்ரான்ஸ்ஃபார்ம் வேலையில் அந்தரத்திலிருந்து பணியைச் செய்ய வேண்டும். அது சமயம் நாங்களும் எங்களின் பாதுகாப்பிற்காக மின் சப்ளையை நிறுத்திவிட்டு ட்ரான்ஸ்ஃபார்மரில் எர்த் போட்டுவிட்டுத்தான் உயர் மின்கம்பங்களில் வேலைகளைச் செய்ய ஏறுவோம். மற்றவர்களுக்கு மரணம் எப்பொழுது என்று தெரியாது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் கண்ணெதிரில் மரணம் உள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்பது நாங்கள் உணர்ந்ததுதான்” என்று கண்கள் கசிய வேதனையை வெளிப்படுத்தும் கலா பார்வதி, அரசாங்கம் எங்களைப் போன்ற மின் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்கினால் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்று வறண்ட குரலில் சொன்னார்.

 

"We have come to this dangerous job because we hate to live" - two women in a painful voice demanding the government

 

“நிரந்தரமற்ற வேலை. எத்தனை நாள் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்பது இந்தப் பணியில் நிச்சயமில்லை. கிடைக்கும் தினக்கூலியான 300 ரூபாயில் பெட்ரோல் செலவு 50 போக மீதமிருப்பதில்தான் எங்களின் வாழ்க்கையை ஓட்டுகிறோம். மரணம் பற்றி எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மரணத்தோடு போராடுகிறோம். எங்கள் வீட்டு வறுமைதான் என் கண்முன்னால் நிக்குது. வறுமைக்கு முன்னால மரணமோ உசுரோ எனக்குத் தூசுதான். உசுரை வெறுத்துத்தான் இந்த ஆபத்தான வேலைக்கு வந்திருக்கிறோம். இதற்கெல்லாம் துணிச்சல் வேணும். உயிர் பயத்த நெனச்சா இந்த வேலைக்கு வரமுடியாது. எங்களைப் போல உயிரை வெறுத்த பெண்களால்தான் இந்த வேலையைப் பார்க்க முடியும். அதே சமயம் இந்த ஆபத்தான பணிக்கு அனுப்ப, வீட்டிலுள்ளவர்களின் சப்போர்ட் வேண்டும்” என்கிற கலையரசியின் குரலில் வேதனை மண்டியிருந்தது. மின்சாரத் துறையின் இளநிலைப் பொறியாளர் நிலையிலிருக்கும் அதிகாரிகள் சிலரிடம் இந்தப் பெண்களின் மின் பணி பற்றி பேசியபோது, “ஆண் பணியாளர்களைவிட இந்தப் பெண் பணியாளர்கள் கொடுக்கப்பட்ட வேலையை விரைவாகச் செய்துவிட்டு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆண்களுக்கு நிகரான இந்தப் பெண்களின் பணியும், துணிச்சலும், அசாத்தியமானதுதான்” என்கிறார்கள். “கண்ணெதிரே நிற்கும் எமன், எந்த நொடியிலும் பாசக்கயிற்றை வீசலாம் என்பதைத் தெரிந்தே இந்தப் பெண்கள் எமனோடு மல்லுக்கட்டுவது அசாதாரணமானதுதான்” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.