
மகனின் தவறான நடத்தையால் விரக்தியடைந்த தாய், ஐந்து துண்டுகளாக வெட்டிய கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி தேவி (57). இவருக்கு ஷியாம் பிரசாத் (35) என்ற மகன் இருந்தார். திருமணமாகாத பிரசாத், ஹைதராபாத் மற்றும் நரசராவ்பேட்டாவில் உள்ள தனது தாய்வழி அத்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்த விஷயம் பிரசாத்தின் தாய் லட்சுமி தேவிக்கு தெரியவர, மகன் மீது கோபமடைந்துள்ளார்.
மகனின் அநாகரீமான நடத்தையைத் தாங்கிக்கொள்ள முடியாத லட்சுமி தேவி, மகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 13ஆம் தேதி தனது மகன் ஷியாம் பிரசாத்தை கோடாரி போன்ற கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி லட்சுமி தேவி கொலை செய்தார். அதன் பிறகு, அவரது உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி மூன்று சாக்கு பைகளில் அடைத்து கம்பம் கிராமத்தில் உள்ள நகலகண்டி கால்வாயில் வீசியுள்ளார். பிரசாத்தை கொலை செய்வதற்கு, தேவியின் உறவினர்கள் அவருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள லட்சுமி தேவி மற்றும் அவரது உறவினர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.