Skip to main content

“என் மனதுக்கு நெருக்கமான பாடல்” - சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சி

Published on 18/02/2025 | Edited on 18/02/2025
santhosh narayanan about retro kannadi poove song

50 படங்களை கடந்து பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் தற்போது கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’, சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’(பின்னணி இசை மட்டும்), சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இதில் ரெட்ரோ படத்தின் முதல் பாடலான ‘கண்ணாடி பூவே’ காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி வெளியானது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியிருக்க விவேக் எழுதியிருந்தார். இப்பாடல் சிறையில் இருக்கும் சூர்யா தன் காதலியை நினைத்துப் பாடுவது போல் அமைந்திருந்தது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிலையில் தற்போது அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கண்ணாடி பூவே பாடல் என் மனதுக்கு நெருக்கமானது. என்னுடைய சில படங்களில் நான் எப்போதும் இசையமைக்க விரும்பும் இசை வகை. நீங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. நீங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. பொதுவாக கீழிருக்கும் இதுபோன்ற இசைக்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் போது கலைஞர்களுக்கு வேறு எதுவும் பெரிய மகிழ்ச்சியைத் தராது. இந்த அன்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நான் புதிதாக இசையமைக்கப் பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. நன்றியுணர்வு நிறைந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இப்பாடல் வெளியாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு என்னுடைய நெருக்கமான பாடல் என நெகிழ்ச்சியுடன் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மே 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சார்ந்த செய்திகள்