![pa.ranjith latest speech about his questioned regards cm stalin government](http://image.nakkheeran.in/cdn/farfuture/xkNGrz2CmdnyTjdcR9vkJmiM8sZASdharH80yjYl79c/1739772247/sites/default/files/inline-images/119_41.jpg)
இயக்குநர் பா.ரஞ்சித் சினிமாவைத் தாண்டி சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் தனது கருத்தை அவ்வப்போது முன் வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன் தினம்(15.02.2025) அவரது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதிய ரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பதிவிட்டிருந்தார். மேலும் “கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா? தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி.களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்” என முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இவரது பதிவு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்த தற்போது அது குறித்து ஒரு மேடையில் ரஞ்சித் விரிவாக பேசியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இது குறித்து அவர் பேசியதாவது, “சாதியைப் பற்றி பேசுவதாலேயே நமக்கு சாதி முத்திரை குற்றப்படுகிறது. அந்த இடத்தில் தான் நாம் இருக்கிறோம். அப்படி சொல்வதின் மூலம் அவர்களின் வேண்டுகோள் என்னவென்றால் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படியெல்லாம் இருக்க முடியாது. நாங்கள் பேசுவோம். எதைப்பற்றி கேள்வி கேட்டாலும் நீ ஏன் கேள்வி கேட்குற, உங்களுக்கு யாரோ பின்னாடி இருக்குறாங்க... என்கிறார்கள். இங்கு பிரச்சனை நடக்கிறது. கடந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை மிக மோசமாக நடந்திருக்கிறது. அதைப் பற்றி எப்போ பேசப்போறீங்க.
ஒரு உண்மைக்கு நிகரா ஒரு உண்மை இங்கு கிடையவே கிடையாது. உண்மைக்கு நிகரா ஒரு பொய்யை உருவாக்குகிறார்கள். அதை சோசியல் மீடியாவில் பேசி இப்படிப்பட்ட ஒரு விஷயமே நடக்கவில்லை என்று ஒரு மாற்றுக் கருத்தை உருவாக்குகிறார்கள். முதலில் பிரச்சனை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றத்தை நாம் ஏன் விரும்புகிறோம். ஏற்கனவே இருக்கிற ஆட்சி சமூக நீதிக்கு எதிரான ஆட்சியாக இருப்பதால் புதிய ஆட்சியை விரும்புகிறோம். சமூக நீதி ஆட்சி வந்ததிற்கு பிறகு சாதிய தீண்டாமைகளோ, சமத்துவத்துக்கு எதிரான சம்பவங்களோ அதிகமாக இருக்கிறதென்றால் அது தொடர்பாக கேள்வியை கேட்க முதலில் நீங்கள் உரிமையை தர வேண்டும். கேள்வி கேட்பவரை எதிரிகளாக மாற்றக்கூடாது.
எனக்கு 42 வயசு ஆகுது. நான் ஏன் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறேன். அது போன்ற சம்பவங்களை தொடர்ந்து கேட்டு வருவதால் தலை எவ்ளோ வலிக்கும் என யாராவது யோசித்திருக்கிறீர்களா. அந்த யோசனையில் இருந்து ஒரு கோவம் வருகிறது. அந்த கோவத்தைக் கூட உன்னால் புரிஞ்சிக்க முடியவில்லை என்றால், எனக்கு என்ன விடுதலையை நீ வாங்கி தந்துவிட முடியும். அப்போது எனக்கான விடுதலையை நான் கோருவேன். எங்களுடைய குரலின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். அது அவசியமானதும் கூட” என்றார்.