Skip to main content

இந்தத் தீர்ப்பைச் சொல்ல இவ்வளவு நாளா?

Published on 15/06/2018 | Edited on 15/06/2018

ஒரு பிரச்சனையை அமுக்க வேண்டுமானால் கமிஷனைப் போடு என்பார்கள். அரசு அமைக்கும் கமிஷன் முடிவு அரசுக்கு எதிராகவா போய்விடும் என்றும் சொல்வார்கள். ஆனால், ஜனநாயகத்தில் மக்களின் இறுதி நம்பிக்கை என்று கருதப்படும் நீதிமன்றங்களின் சமீகால நடவடிக்கைகளும் அரசுகளைக் காப்பாற்றும் வகையிலேயே இருப்பதாக சட்ட அறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணமாக 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருப்பாதக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

தமிழக முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் எனக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 19 பேர் ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, எடப்பாடி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலையில், ஒருவர் பழனிச்சாமிக்கு ஆதரவாக திரும்பினார். இதையடுத்து, தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 

Indhra

 

 

 

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமைத்திருக்கலாம் என்ற கருத்து நிலவினாலும், அதில் ஒரு அரசியல் இருந்ததை தீர்ப்பு வெளியான போதுதான் உணர முடிந்தது. இந்த வழக்கில் மே 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகளும், மாறுபட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

 

 

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறமுடியாது. பேரவைத் தலைவர் உத்தரவை பிறப்பிக்கும் முன்னர் ஆட்சியை கலைப்பார்களா, மாட்டார்களா என்ற இரண்டு வாய்ப்புகள் இருந்தது. அதனடிப்படையில் தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு இந்த முடிவை எடுக்க வேண்டுமென பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. அது நீதிமன்ற பணியும் இல்லை. அவருக்கு கிடைத்த ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் பிறபித்த உத்தரவுகளில் பேரவைத் தலைவர் அதிகாரங்களில் குறைந்த அளவிற்கே நீதிமன்றங்கள் தலையிட முடியும். முழுக்க முழுக்க சட்டவிதி மீறப்பட்டாலோ அல்லது சட்டவிதிகளை பின்பற்றாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ முடிவெடுத்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். பேரவைத் தலைவர் முடிவெடுக்க பயன்படுத்தும் சட்டங்களில் முரண்பாடு இருந்தாலும் நீதிமன்றம் தலையிட முடியும். பேரவைத் தலைவர் தனக்கு தரப்பட்ட அதிகாரத்தை மீறி முடிவு எடுத்தாலோ, அவரது முடிவில் சட்டம் மீறபட்டிருந்தாலோ, இயற்கை நியதி மீறப்பட்டிருந்தாலோ மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால் இந்த வழக்கில் பேரவைத் தலைவரால் இந்த சட்ட விதிகள் மீறப்பட்டதாக தெரியவில்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக பேரவைத் தலைவர் இந்த நடவடிக்கை எடுத்தார் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

 

இந்திரா பானர்ஜியைத் தொடர்ந்து, நீதிபதி எம்.சுந்தர், தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது,  “தலைமை நீதிபதியின் உத்தரவில் இருந்து, இந்த வழக்கில் நான் மாறுப்பட்டு தீர்ப்பு அளிக்கிறேன் என்று கூறிவிட்டு, பேரவைத் தலைவரின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனடிப்படையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது. இதேபோன்ற பிரச்னையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா வழக்கை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஆளுனரை சந்தித்து மனு கொடுத்ததை அடிப்படையாக கொண்டு கட்சிதாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது. கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ-க்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும், அவர்களில் பின்னர் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு ஒரு முடிவும் எடுத்துள்ளார். மனுதாரர்களுக்கு அவர்களின் தரப்பு விளக்கங்களைக் கொடுக்க பேரவைத் தலைவர் உரிய வாய்ப்புகளைத் தரவில்லை. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது தெளிவாகிறது.  அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, பேரவைத் தலைவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதை குலைத்துவிடக் கூடாது. இந்த காரணங்களுக்காக பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
 

high

 

 

 

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளிப்பதற்கு இந்த வழக்கில் முகாந்திரமே இல்லை என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால், இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகள் முன்மாதிரியாக இரு்ககின்றன. எனவே, இந்த வழக்கில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்களையும், விசாரணை முடிந்து தீர்ப்பளிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்களையும் மிக அதீதமானது என்று கூறுகிறார்கள்.

 

 

2010 ஆம் ஆண்டு கர்நாடக முதல்வர் எடியூரப்பாமீது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது,  16 எம்.எல்.ஏ.க்களின் பதவியை சாபாநாயகர் பறித்தார். இதில், 11 பேர் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள். மீதி ஐந்து பேர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள். எடியூரப்பா முதல்வராக நீடிக்க ஆதரவளித்து வந்த 16 பேரும், தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கியதால் சபாநாயகர் போபையாவால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 16 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கு இவர்களுடைய தகுதிநீக்கம் சரியானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 2011 ம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

 

 

“நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வரின் வெற்றி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார். அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், நீதியைக் கருத்தில் கொள்ளாமல் சபாநாயகர் எடுத்த முடிவை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. முதல்வருக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்பட்டுள்ளார் என்பதைத் தவிர, வேறு எந்த தர்க்கபூர்வமான காரணங்களும் தகுதி நீக்கத்துக்கு இல்லை. எனவே எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்கிறோம்'' என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியது. ஆனால், தீர்ப்பு வெளியானபோது எடியூரப்பா அரசின் பதவிக்காலமே முடிந்துவிட்டது என்பதுதான் இதில் சோகம். 

 

எடியூரப்பாவுக்கு ஆதரவை வாபஸ்பெற்றதைப் போலவே, இங்கே எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம்தான் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பயந்துபோன எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகரை பயன்படுத்தி முதல்வரை சந்தித்த ஒருவரை விடுத்து, 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தார்.

 

வழக்கிற்கு தெளிவான முன்னுதாரணம் இருக்கு நிலையில் தமிழக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் காலதாமதமே இல்லாமல் தீர்ப்பு வழங்கியிருக்க முடியும். ஆனால், மத்திய அரசின் எடுபிடியாக செயல்படும் அதிமுக அரசை தூக்கிப்பிடிக்கவே இந்த காலதாமதம் என்று சாதாரண பார்வையாளர்களே நினைக்கும் அளவுக்கு நீதித்துறை செயல்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
 

yeddyurappa

 

 

 

எடப்பாடி அரசுக்கு மேலும் அவகாசம் வழங்கவே மூன்றாவது நீதிபதியின் கருத்துக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம். அவர் ஆதரவாக தீர்ப்பளித்தாலும், எதிராக தீர்ப்பளித்தாலும் உச்சநீதிமன்றத்துக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே அது அளித்த தீர்ப்பு இருக்கிறது. அது அளித்த தீர்ப்பையே திருப்பிச் சொல்ல ரொம்ப கால அவகாசம் எடுக்க முடியாது. ஆனால், அந்தா, இந்தா என்று 2019 மக்களவைத் தேர்தல் வரை இழுத்தடிக்க முடியுமா என்பதற்கே இந்த இழுத்தடிப்பு என்றும் ஒரு சாரார் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

 

 

மோடி பிரதமரான கடந்த நான்காண்டுகளில் ஜனநாயகமும், நீதித்துறையும், ஊடகத்துறையும் படும்பாட்டை எழுத்தில் விவரிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் பெரும்பான்மையாக வெற்றிபெற்றால் எப்படி ஆட்சி நடத்துவார்கள் என்பதற்கு சாட்சியாகவே அனைத்து நிகழ்வுகளும் இருக்கின்றன. 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.