சேவை குறைபாடு தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு டைட்டன் நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.பி.சண்முக சுந்தரம், சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு மன்றத்தில் கடந்த 2015- ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வடபழனியில் உள்ள டைட்டன் கைக்கடிகார நிறுவனத்தில் 7 ஆயிரத்து 195 ரூபாய் மதிப்பில் கடிகாரம் வாங்கினேன். மூன்று மாதத்தில் அதில் பழுது ஏற்பட்டது. உடனடியாக அதே ஆண்டு டிசம்பர் மாதம் டைட்டன் நிறுவனத்தின் கடையில் கொடுத்து பழுது குறித்து தெரிவித்தேன்.
![titan watches technical problem chennai consumer court approach has customer](http://image.nakkheeran.in/cdn/farfuture/62AFMfKQ6GXOj2xBMVSOWvu0OVxbm9PmWXcalNxd3xQ/1576607327/sites/default/files/inline-images/titan4.jpg)
ஆனால் உரிய முறையில் அவர்கள் பதில் அளிக்காமல் இழுத்தடிக்கும் வகையில் செயல்பட்டு வந்தனர். உத்தரவாதம் இருந்தும் தொடர்ந்து டைட்டன் நிறுவனம் பழுதை சரி செய்யாமலும், அல்லது புதிய கடிகாரம் மாற்றி தரமாலும் இழுத்தடித்து வந்தனர். எனவே சேவை குறைபாட்டில் ஈடுபட்ட டைட்டன் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு வழங்கவும் கடிகாரத்தை மாற்றி தரவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
![titan watches technical problem chennai consumer court approach has customer](http://image.nakkheeran.in/cdn/farfuture/s171bcMeEGnsDWcE-LKrceI2mo708jXPtmBT20uPKPI/1576607380/sites/default/files/inline-images/Chennai_High_Court1111222222_1.jpg)
இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றம், ஆவணங்கள் அடிப்படையில் டைட்டன் கடிகார நிறுவனம் சேவை குறைபாட்டில் ஈடுபட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திற்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், மனுதாரர் வாங்கிய கடிகாரத்தைப் போன்ற அதே மாடல் கடிகாரத்தை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். மேலும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் அளிக்கவேண்டும் என்றும் டைட்டன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.