![move to transform farmers' markets into global markets says MRK Panneerselvam](http://image.nakkheeran.in/cdn/farfuture/z2QCO6isPe0jq-_EzYHlWMSCDKqfJ_t3jx-u9dOSG4k/1707225677/sites/default/files/inline-images/Untitled-1_697.jpg)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக ரூ. 45.33 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உழவர் சந்தை திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகத் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி உழவர் சந்தையைத் திறந்து வைத்து உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளை நேரடியாக இடைத்தரகர் இல்லாமல் விற்பனை செய்யும் வகையில் இந்த உழவர் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையை உலகச் சந்தையாக மாற்றுவோம் என ஏற்கனவே அறிவித்தோம். அதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டிலும் வெளிவரலாம். வீடுகளுக்குத் தேவையான காய்கறிகளை வீட்டிலே சிறு இடத்தில் விளைய வைக்க வேண்டும். தற்போது விவசாயம் இயந்திரமாக மாறி வருகிறது. மானியத்துடன் விவசாயிகளுக்குத் தேவையான இயந்திரப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இயந்திரமயமாக மாறுவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. எனவே உழவர் சந்தையைப் பொதுமக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
தமிழக முதன்மைச் செயலாளரும் வேளாண்துறை செயலாளருமான அபூர்வா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை ஆணையர் பிரகாஷ், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கண்ணையா, தோட்டக்கலைத்துறை மாவட்ட துணை இயக்குநர் அருண், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி இயக்குநர் பூங்கோதை, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி மன்றத் தலைவர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அருள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.