கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்த தங்கராசு எனபவரது மகன் ராமசாமி. இவருக்கும் சின்னசேலம் பகுதியை சேர்ந்த செந்தில்ராஜா - ராதா தம்பதியினரின் மகளான கெளசல்யாவிற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், ராமசாமி வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கௌசல்யா மீது ராமசாமி உறவினர்கள் தவறான தகவல்கள் கூறியதாகவும், அதனால் சந்தேகமடைந்த அவர் கடந்த 30.9.2018 அன்று வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்தவர், மாடியில் படுத்திருந்த தனது மனைவி கவுசல்யாவை, உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன கௌசல்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கவுசல்யா உயிரிழந்தார்.
![Husband sentenced to life imprisonment in cuddalore](http://image.nakkheeran.in/cdn/farfuture/jZ6JrJAKbUmF7KE404aouC1qDqVk4NovgvUDb-bi2DQ/1574166395/sites/default/files/inline-images/x7_1.jpg)
இதுகுறித்து கௌசல்யாவின் தந்தை செந்தில்ராஜா அளித்த புகாரின் பேரில் இவ்வழக்கு விசாரணை விருத்தாச்சலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமசாமி, குற்றவாளி என்று உறுதி ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் வழங்கி நீதியரசர் இளவரசன் தீர்ப்பளித்தார். பின்னர் குற்றவாளி ராமசாமியை காவல்துறையினர் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர் .
![Husband sentenced to life imprisonment in cuddalore](http://image.nakkheeran.in/cdn/farfuture/t-ZKL6yG0VVG3Lw-jLXgB_4CQTu38WzOd4QjqkuAeFE/1574166409/sites/default/files/inline-images/x6.jpg)
இதேபோல் புதுச்சேரி, சேதுராப்பட்டு அடுத்த கரசூர் மேட்டுத் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் அய்யப்பன் (38) என்பவரும், அதே பகுதி மெயின்ரோட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம்(34) என்பவரும்.நண்பர்கள். இருவரும் கடந்த 14.08.2016 அன்று அதே பகுதியில் உள்ள ஒரு சாராயக் கடையில் சாராயம் குடித்தனர். போதையில் இருந்த அய்யப்பன், ஆறுமுகத்தை ஆபாசமாக பேசியுள்ளார். ஆத்திரமடைந்த ஆறுமுகம், அய்யப்பனை தாக்கினார். அதன்பிறகும் கோபம் தணியாததால், மறுநாள் அதிகாலை அய்யப்பனை தனது வீட்டுக்கு துாக்கிச் சென்று அடைத்து வைத்து, கடப்பா கல்லால் தாக்கி உள்ளார். இதில் அய்யப்பன் உயிரிழந்தார்.
புகாரின் பேரில் சேதுராப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி ஆறுமுகம் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நேற்று தலைமை நீதிபதி தனபால் கொலை குற்றத்திற்காக ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அதை தொடர்ந்து, ஆறுமுகம், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.