Skip to main content

பாஜக மாநில துணை தலைவர் சிறையில் அடைப்பு

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

BJP State secretary arrested in dharmapuri

 

நெஞ்சுவலி இருப்தாகக் கூறி நாடகமாடிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை, காவல்துறையினர் பலவந்தமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பாரத மாதா நினைவக வாயில் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்த வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

 

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாஜக சார்பில் பாத யாத்திரை நடந்தது. அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான கே.பி.ராமலிங்கம் யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவருடைய தலைமையில் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று, பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவா நினைவிடத்தை அடைந்தனர். அந்த நினைவிட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கட்சியினர் முயன்றனர்.

 

ஆனால் நினைவாலய வாயில் கதவு பூட்டப்பட்டு இருந்தது. நுழைவு வாயில் பூட்டைத் திறந்து விடும்படி அங்கிருந்த ஊழியரிடம், கே.பி.ராமலிங்கம் கேட்டார். ஆனால் அந்த ஊழியரோ, உயர் அதிகாரிகளின் உத்தரவின்றி கதவைத் திறந்து விட முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கே.பி.ராமலிங்கம், கீழே கிடந்த கல்லை எடுத்து பாரத மாதா நினைவக வாயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் அவர் தலைமையில் பாஜகவினர், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

 

இதையடுத்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாகவும், அத்துமீறி நுழைந்ததாகவும் கூறி கே.பி.ராமலிங்கம் மற்றும் பாஜகவினர் மீது பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கே.பி.ராமலிங்கத்தை ஆக. 14ம் தேதி கைது செய்தனர். சிறைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு அவருக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு ரத்தக்கொதிப்பும், நெஞ்சுவலியும் இருப்பதாகக் கூறியதை அடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

 

இது ஒருபுறம் இருக்க, அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க பென்னாகரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, கே.பி.ராமலிங்கம் உடல்நலம் தேறியது. அவர் குணமடைந்ததாக மருத்துவர்கள் சான்றளித்தனர். இதனால் அவர், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை (ஆக. 18) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைப்பதற்காக பாப்பாரப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வந்தனர். ஆனால் அவர்களிடம் கே.பி.ராமலிங்கம் தனக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், தன்னால் சிறைக்கு வர முடியாது என்றும் கூறினார். ஆனாலும் காவல்துறையினர், அவரை பலவந்தமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.