![Rs. 3 crore loss Cooperative Sugar Mill](http://image.nakkheeran.in/cdn/farfuture/NppT3bcn1W6grckCoVjGBCPb8n70UiDvc1Ym3qqlmZk/1652180552/sites/default/files/inline-images/th_2235.jpg)
விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 3000 டன் கரும்பு அரவை செய்யப்படும். இந்த ஆலையில் கரும்பிலிருந்து கழிவாக வெளியேறும் மொலாசஸ் என்ற பாகுவை எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.
கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் கழிவு மூலம் மொலாசஸ் பாகுவை சேமித்து வைப்பதற்காக 4 ஆயிரம் மெட்ரிக் டன் கொண்ட உலோகத்தினால் செய்யப்பட்ட 4 டேங்கர்கள் ஆலய வளாகத்தில் உள்ளன. ஒரு டன் கரும்பில் இருந்து 100 கிலோ சர்க்கரை என்ற விகிதத்தில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை பருவம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்தநிலையில் மொலாசஸ் கொதிக்க வைக்கும் டேங்கர் அதிக வெப்ப அழுத்தம் தாங்காமல் அதில் ஒரு டேங்க் வெடித்துள்ளது. அதிலிருந்து மொலாசஸ் பாகு சிதறி ஓடியுள்ளது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. டேங்கில் இருந்து வெளியேறிய மொலாசஸ் கால்வாய் தண்ணீர் போல பெருக்கெடுத்து ஓடியுள்ளது. ஒரு டன் மொலாசஸ் இன்றைய விலையில் 7,500 ரூபாய் என்று கூறப்படுகிறது. மொலாசஸ் டேங்க் வெடித்ததின் மூலம் சர்க்கரை ஆலைக்கு சுமார் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறுகிறார்கள்.