![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/CX8Yw4pcCZD4Y344yyYUaC6AdvmXP8jpfDZCRMcqNMg/1709264867/sites/default/files/inline-images/a5139_0.jpg)
அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
நேற்று முன்தினம் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 என தெரியவந்தது.
![Anti-corruption department raids the house of another AIADMK former MLA](http://image.nakkheeran.in/cdn/farfuture/tZgWyjyYSjTs2rB9LEnr2-cYI9ZftxGpVydANeGZ3s8/1709264886/sites/default/files/inline-images/a5157.jpg)
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.