Skip to main content

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்சம்; பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

Trichy inspector Malathi sacked for accepting bribe

 

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா. இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் ஜெகதீசன். இவர்களது இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் மீது கடந்த மாதம் 2 ஆம் தேதி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மாலதி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என யுவராஜாவிடம் காவல் ஆய்வாளர் மாலதி ரூ. 5000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். மேலும், அதனை 13.12.2022 அன்று காலை காவல்நிலையம் வந்து தன்னிடம் கொடுக்குமாறும் தெரிவித்திருக்கிறார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனையின் பேரில், யுவராஜாவிடமிருந்து காவல் ஆய்வாளர் மாலதி 5000 லஞ்சமாகப் பெற்றபோது (13.12.2022) காலை 10 மணி அளவில் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

 

மேலும், காவல் ஆய்வாளர் மாலதி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்பேரில், நேற்று காவல் ஆய்வாளர் மாலதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்