Doordarshan Ban on Saying 'Islamic'; Sitaram Yechury strongly condemned

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இத்தகை சூழலில் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் பிரச்சார உரையின் போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘இஸ்லாமியர்’ என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தேர்தல் பிரச்சார உரையின் போது இஸ்லாமியர் என்பதற்கு பதில் மாற்று மதத்தினர் என பயன்படுத்த வற்புறுத்தப்பட்டது. வகுப்புவாத கட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சி என்ற சொற்களை பயன்படுத்தவும் தூர்தர்ஷன் தடை விதித்துள்ளது. கொடூர சட்டங்கள் என்ற சொல்லை பயன்படுத்தவும் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி தடை விதித்துள்ளது. மேலும் தூர்தர்ஷன் தடை விதித்த சொற்களை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்தும் ஏற்கவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.