Skip to main content

108-ல் நடந்த பிரசவம்-பணியாளர்களை பாராட்டும் உறவினர்கள்!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
108 birth-relatives praise the staff!

புதுக்கோட்டை மாவட்டம்,  அறந்தாங்கி அருகில் உள்ள அரசர்குளம்  கிராமத்திலிருந்து 108 -க்கு அழைப்பு சென்றது. பிரசவ வலியால் துடிக்கும் பெண்ணை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகனும் என்று கூறியுள்ளனர்.

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நின்ற 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று  பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த சத்யா  (வயது 30 ) என்ற கர்ப்பிணியை ஏற்றி கொண்டு அறந்தாங்கி விரைந்தனர். செல்லும் வழியில் சத்யாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் பிரகாஷ் ஆம்புலன்சை ரத்தின கோட்டை அருகில் சாலை ஓரமாக நிறுத்தினார்.

வலி அதிகரித்து துடித்த சத்யாவுக்கு 108  ஆம்புலன்ஸ்  அவசரகால மருத்துவ நிபுணர் கருணாகரன் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்து முதலுதவி சிகிச்சை அளித்தார். சத்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு மருத்துவ சிகிச்சை அளித்து பாதுகாப்பாக அறந்தாங்கி  அரசு  மருத்துவமனைக்கு  அழைத்து சென்று அங்கு தாய், சேய் இருவரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தப் பணியை சிறப்பாக செய்த ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் மருத்துவ நுட்புனர் கருணாகரன்  ஆகிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உறவினர்கள் மற்றும் அறந்தாங்கி பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
A 9-month-old baby lose their live after falling into a bucket

கோபிசெட்டிபாளையம் அருகே தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீம்(35). இவரது மனைவி ரீமா(32). இவர்களுக்கு ரோஷினி, ரட்சனா, ராணி, அமித் மற்றும் ராசி (9 மாத கைக்குழந்தை) இருந்தனர். இவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர், பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் மில் குடியிருப்பில் தங்கி கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை கணவர் பீம் பால் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அப்போது துணிகளை துவைப்பதற்காக மனைவி ரீமா பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீருடன் சோப்பு பவுடரை கலந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். குழந்தை ராசி வீட்டிற்கு வெளியே இருந்துள்ளது. பின்னர் சமையல் வேலையை முடித்து விட்டு ரீமா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார்.  அப்போது குழந்தை ராசி சோப்பு தண்ணீர் பக்கெட்டிற்குள் தலைகீழாக விழுந்து கிடந்தது தெரியவந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரீமா ஓடிச் சென்று  குழந்தையை தூக்கிய போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மூடநம்பிக்கை;‘பேரனைக் கொன்ற தாத்தா’ - விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Ariyalur district near Jayangondam Utkotai village boy child incident

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது உட்கோட்டை கிராமம். இங்கு வசித்து வந்தவர் வீரமுத்து. இவரது மகள் சங்கீதாவுக்கும் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தகைய சூழலில்தான் சமீபத்தில் இத்தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து கடந்த 14 ஆம் தேதி (14.06.2024) இரவு நேரத்தில் யாரோ துணியில் சுற்றி குளியல் அறையில் உள்ள வாளி நீரில் போட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மூட நம்பிக்கையில் பேரனை தாத்தா கொன்றது தெரியவந்துள்ளது. குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததால், உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என்ற மூடநம்பிக்கையில் கொலை செய்துவிட்டு, நாடகமாடியுள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையைத் தண்ணீர் பேரலில் மூழ்கடித்துக் கொடூரமாக கொன்ற குழந்தையின் தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையு ஏற்படுத்தியுள்ளது.