Skip to main content

பள்ளிகள் திறப்பை கைவிட வேண்டும்! -அன்புமணி இராமதாஸ்

Published on 04/11/2020 | Edited on 04/11/2020
 Anbumani Ramadoss

 

 

கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை அல்லது கரோனா முழுமையாக கட்டுக்குள் வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பை அரசு கைவிட வேண்டும்; அதுவரை ஆன்லைன்  வகுப்புகளை தொடர வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தீபஒளி திருநாளுக்குப் பிறகு நவம்பர் 16-ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா அச்சம் முழுமையாக விலகாத சூழலில், பள்ளி, கல்லூரிகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவு சரியானதாக தோன்றவில்லை.

 

கரோனா வைரஸ் பாதிப்பு மாணவர்களையும், ஆசிரியர்களையும் மட்டும் பாதிக்கக்கூடியது அல்ல. அவர்கள் மூலமாக வீட்டில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், முதியோர் குழந்தைகளையும் தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கைத் தேவை. அனைத்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்கும் நிலையில், தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுத்து அதனால் இம்முடிவை அரசு எடுத்ததாக இருக்கக்கூடாது.

 

தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவல் 3000-க்கும் கீழாக வந்து விட்டது; கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருவோரின் எண்ணிக்கை 20000-க்கும் கீழாக குறைந்துவிட்டது  என்பன உள்ளிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக தோன்றுகிறது. ஆனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுப்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் பொருத்தமான அளவீடு இல்லை என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்து ஆகும்.

 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் முதல் உள்ளூர் மருத்துவ வல்லுனர்கள் வரை பரிந்துரைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனப்படுபவை முகக்கவசம் அணிதல், கையுறைகளை அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை தான். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இவை சாத்தியமில்லை என்பது தான் எதார்த்தம் ஆகும். 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தான் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. மாணவர் பருவம் என்பது உற்சாகமாகவும், குதூகலமாகவும் விளையாடி மகிழும் பருவம் ஆகும்.  அனைத்து மாணவர்களும் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு, நடப்புக் கல்வியாண்டில் இப்போது தான் வகுப்புகளில் முதன்முறையாக சந்திக்கவுள்ளனர். இந்த தருணத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்துவது என்பது காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவதற்கு ஒப்பான செயலாகும். இது சாத்தியமற்ற, பயனளிக்காத ஒன்றாகும்.

 

முகக்கவசம் அணிவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை மிகவும் சிரமமான  செயலாகும். அதிகபட்சமாக அரை மணி நேரம் முகக்கவசம் அணிந்தாலே பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். ஆனால், வகுப்புகளில் அவ்வப்போது சில நிமிட இடைவெளிகளுடன் 6 முதல் 7 மணி நேரம் வரை முகக்கவசம் அணிவது மிக மிகக் கடினம் ஆகும். ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படுவதாலோ, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாலோ ஒரு சில நிமிடங்களுக்கு முகக்கவசத்தை கழற்றினால் கூட, அதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. அதேபோல், கையுறைகளை அணிந்து கொண்டு பாடக்குறிப்புகளை எழுதுவதிலும் சிக்கல்கள் உள்ளன. கையுறைகளை அணியாமல் பள்ளியில் உள்ள பல பொருட்களை தொடும் போது, அச்செயல்கள் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு வழி வகுக்கக்கூடும். மொத்தத்தில் இந்த நேரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது என்பது நெருப்புடன் விளையாடுவதற்கு ஒப்பானதாகும். இது ஆபத்தானது.

 

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் விடுதிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள மாணவர்கள் 24 மணி நேரமும் முகக்கவசம் அணிவது சாத்தியமல்ல. அவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று இருந்தால் கூட விடுதியில் உள்ள அனைவரும், அவர்கள் மூலமாக கல்வி நிறுவனங்களில் உள்ள  பெரும்பான்மையினருக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பொதுக் கழிப்பறையைத் தான் மாணவ, மாணவியர் பயன்படுத்த வேண்டியிருக்கும். அவை தான் கரோனா தொற்று மையமாக திகழும். இத்தகைய ஆபத்தான விளையாட்டில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது.

 

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் கரோனா ஆபத்து அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஆசிரியர்களில் கணிசமானவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால் பள்ளிகளைத் திறந்து ஆபத்தை விலைக்கு வாங்கக் கூடாது. இந்த எச்சரிக்கைகளை எல்லாம் அச்சுறுத்துவதற்காக கூறவில்லை. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் அனுபவங்களில் இருந்தும், அந்த நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, கரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் மூடப்பட்ட வரலாற்றை அறிந்ததாலும் தான் கூறுகிறேன். இந்த ஆபத்துகளை அரசு உணர வேண்டும்.

 

பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்பது கல்வி சார்ந்த அக்கறையாக இருக்கலாம். ஆனால், அவற்றை விட மாணவர்களின் உயிர் முக்கியமாகும். தமிழ்நாட்டில் கரோனா  அச்சம் முழுமையாக தணியவில்லை. கரோனா வைரஸ் முழுமையாக அகற்றப்பட்டால் மட்டுமே கற்றல் சாத்தியமாகும். டெல்லி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா  பாதிப்பு முதலில் குறைந்தாலும், பின்னர் பெருமளவில் அதிகரித்து விட்டது. உலக அளவில் கரோனா இரண்டாவது அலை தொடங்கிவிட்டது; பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆந்திராவில் வகுப்புகள் தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அச்சத்தை அதிகரிக்கின்றன.

 

இத்தகைய சூழலில் பள்ளி - கல்லூரிகளைத் திறந்து தமிழகத்திலும் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது. கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை அல்லது கரோனா முழுமையாக கட்டுக்குள் வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பை அரசு கைவிட வேண்டும்; அதுவரை ஆன்லைன்  வகுப்புகளை தொடர வேண்டும். வல்லுனர்கள் குழு பரிந்துரைக்கும், கள எதார்த்தத்திற்கும் ஏற்ற வகையில் பாடங்களின் அளவை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Anbumani question Why is cm stalin not talking about the Mekedatu issue?

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,‘‘உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’’ என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,‘‘நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்’’ என்று விளக்கமளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது  மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.