Skip to main content

‘23 லட்சம் வரை போயிடுச்சி...’ - மகனுக்காக தீக்குளிக்க முயன்ற பெற்றோர்

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

 Parents attempted lost their life for their son in Tirupur

 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக தன் மகனை டாக்டர் ஆக்க வேண்டும் என பாடுபட்ட தம்பதி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் தனசெல்வன். இவர் சென்னை மத்திய நூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி பியூலா. இவர்களது மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என ஆசைப்பட்ட தம்பதி, அதற்காக ஏராளமான கல்லூரிகளுக்கு சீட் வாங்க அலைந்து திரிந்துள்ளனர்.

 

இந்நிலையில், தனசெல்வன் - பியூலா தம்பதியினரிடம் கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிர்தோஸ் சலாவுதீன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிமுகமாகியுள்ளார். அப்போது, அவர்களுடைய மகனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக கூறிய சலாவுதீன் அவர்களிடம் இருந்து 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ரொக்கமாக வாங்கியுள்ளார்.

 

இதையடுத்து அவர்களிடம் பணத்தை வாங்கிய பிறகு அவர் சொன்னபடி எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தராமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த தனசெல்வன் - பியூலா தம்பதி சலாவுதீன் குறித்து கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வந்துள்ளனர். ஆனால், காவல் அதிகாரிகள் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

இதனால் மனவேதனை அடைந்த தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு திடீரென டீசல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக  அவர்கள் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றியுள்ளனர். அதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை காவல் நிலையம் அழைத்துச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்