Skip to main content

பாகிஸ்தான் வீரர்களைக் கவர்ந்த இந்திய உணவு; மார்க் போட்ட வீரர்கள்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Indian food impresses Pakistani cricket players

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா இந்த ஆண்டு நடத்தவுள்ளது. இன்று தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காகப் பாகிஸ்தான் உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகளும் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் இந்தியா வந்ததுமே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இந்தியாவில் உள்ள ஏராளமான உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஹைதராபாத் பிரியாணியும் அடக்கம்.

 

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம், பாகிஸ்தானின் கராச்சி பிரியாணி அல்லது இந்தியாவின் ஹைதராபாத் பிரியாணி இதில் எது சிறந்தது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உற்சாகமாகப் பதில் அளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “ஹைதராபாத் பிரியாணி தான், அதற்கு 10க்கு 8 மதிப்பெண் கொடுப்பேன்” என்று கூறினார். அதே கேள்வியை அசன் அலியிடம் கேட்டபோது, “ஹைதராபாத் பிரியாணிக்கு 10க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன். பிரியாணிக்கு ஆசைப்படுபவர்கள் ஹைதராபாத் பிரியாணியை தான் சாப்பிட வேண்டும்” என்று கூறினார். 

 

இதையடுத்து,  இமாம் உல்ஹக் கூறும்போது, “ஹைதராபாத் பிரியாணி தான் அற்புதம். நான் 10க்கு 11 மதிப்பெண் கொடுப்பேன்” என்றார்.  மற்றொரு வீரரான ஷதாப் கான், “ஹைதராபாத் பிரியாணி உலக பேமஸ் ஆச்சே... இந்தியா வந்ததும் முதலில் அதைத்தான் சாப்பிட்டேன். அதற்கு 10க்கு 20 மதிப்பெண் கொடுப்பேன்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'5 பைசா ஆஃபர் பிரியாணி'-மக்கள் திரண்டதால் ஷட்டரை மூடிய கடைக்காரர் 

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
 '5 paisa offer biryani'-shopkeeper closes shutters as crowd gathers

பெரும்பாலும் புதிதாகப் பிரியாணி கடைகள் திறக்கும் பொழுது 10 ரூபாய்க்கு ஒரு பிரியாணி அல்லது ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற நூதன விளம்பரங்களைப் பார்த்திருப்போம். கடை திறக்கும் நாளிலேயே மக்கள் கூட்டம் கடையில் அலைமோத வேண்டும் எனக் கடையின் உரிமையாளர்கள் இந்த நூதன முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஆனால் தற்பொழுதெல்லாம் இதைவிட மேலும் நூதனமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பிரியாணி கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கரூரில் 'திண்டுக்கல் பிரியாணி' என்ற புது பிரியாணி கடை திறக்கப்பட்டது. அறிமுக நாள் சலுகையாக ஒரு பைசா, 5 பைசா, பத்து பைசா உள்ளிட்ட செல்லாத நாணயங்களை கொண்டு வந்தால் பிரியாணி இலவசம் என விளம்பரப்படுத்தப்பட்டது.

செல்லாத காசுகள் மக்களிடம் இல்லாமல் இருக்கலாம் என கடை நிர்வாகம் நினைத்ததோ என்னவோ இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் அடுத்த நாள் காலையிலேயே செல்லாத ஐந்து பைசா, பத்து பைசா காசுகளுடன் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த வரவேற்பை எதிர்பாராத பிரியாணி கடையினர் மக்கள் கூட்டத்தை கண்டதும் 50 பேருக்கு மட்டும் பிரியாணி டோக்கனை கொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கடையின் ஷட்டரை  மூடிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பிரியாணிக்கு காசா? - ஹோட்டல் உரிமையாளரைத் தாக்கிய கும்பல்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
After eating biryani, the gang beaten the hotel owner after refusing to pay

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில்  நேற்று மதியம்  மது போதையில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் பரோட்டா மற்றும் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர். பின்னர் பணம் தராமல் அங்கிருந்து செல்ல முயன்றனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் அந்த கும்பலிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உரிமையாளரைத் தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் அந்த கும்பலைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்நிலையில் இரவு நேரத்தில் ஈரோடு மரப்பாலம் பகுதியில் அந்த 4 பேர் கொண்ட கும்பல் சுற்றித் திரிந்துள்ளது. இவர்களை அடையாளம் தெரிந்து கொண்ட பொதுமக்கள் அந்த கும்பலை தர்ம அடி கொடுத்து பிடித்தனர். 

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்த இருவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், புவனேஸ்வரன் எனத் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் ஓட்டலில் தகராற்றில் ஈடுபட்டு தலைமறைவான சூர்யா மற்றும் மாதேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ஈரோடு ஓட்டலில் மதுப் பிரியர்கள் தகராற்றில் ஈடுபட்டு வருவது தொடர்கதை ஆகி வருகிறது.