Skip to main content

தமிழக அரசை ஏமாற்றுவதற்கு கேரளம் விரிக்கும் மாயவலை: ராமதாஸ்

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கோரி பேச்சு நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்திருக்கிறது. இது முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசை ஏமாற்றுவதற்கு கேரளம் விரிக்கும் மாயவலை என்பதை சுட்டிக்காட்ட பா.ம.க. விரும்புகிறது.
 

முல்லைப்பெரியாற்றில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயாரிப்பதற்கான புள்ளிவிவரங்களை  திரட்டுவதற்கான ஆய்வுகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையுடன்  தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தையும் இணைத்து தாக்கல் செய்தால் மட்டுமே, முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க முடியும் என்றும், அவ்வாறு தாக்கல் செய்யப்படாத சூழலில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறிவிட்டது.

 

ramadoss


 

அதனால் வேறு வழியே இல்லாத சூழலில், முல்லைப்பெரியாறு அணை குறித்து தமிழகத்துடன் பேச்சு நடத்தப்போவதாக கேரள நீர்ப்பாசனத்துறையின் தலைமைப் பொறியாளர் கே.எச். சம்சுதீன் கூறியுள்ளார். 123 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டதால், அதற்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டியதன் தேவையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சம்சுதீன் கூறியுள்ளார். இவை அனைத்தும் தேனில் தோய்த்தெடுத்த நச்சு வார்த்தைகள். இவற்றை நம்பக்கூடாது.
 

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு கேரள அரசு செய்த துரோகங்களையும், தமிழகத்திற்கு எதிராக செய்த நச்சுப் பிரச்சாரங்களையும் எவரும் எளிதில் மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட கேரள அரசு, இப்போது முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பேச்சு நடத்த அழைப்பு விடுப்பதை நம்பி, கேரளத்துடன் தமிழ்நாடு பேச்சு நடத்தினால், தமிழகத்திற்கு தான் பாதிப்பு ஏற்படும்.


 

 

இதற்கெல்லாம் மேலாக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பேசுவதற்கு எந்த அவசியமும் இப்போது எழவில்லை. 2014-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி முல்லைப்பெரியாறு அணை வழக்கில்  தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிட கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தரை ஆண்டுகளாகி விட்ட நிலையில், அணையை வலுப்படுத்தி நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இதற்காக அண்மையில் கூட ரூ.7.85 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது. எதிர்பார்ப்பது போன்று அனைத்தும் நடந்தால் இன்னும் சில மாதங்களில்  அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ள சூழலில், புதிய அணை குறித்து கேரளத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும்.
 

முல்லைப்பெரியாறு குறித்து கேரளத்துடன் பேச்சு நடத்தும் போதெல்லாம் தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்படுவதும், பேச்சு நடத்த மறுக்கும்போதெல்லாம் நன்மை நடப்பதும் வாடிக்கையாகும். முல்லைப்பெரியாறு சிக்கலைப் பேசித் தீர்க்க முயலும்படி 2006-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதையடுத்து, அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞரும், கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் அந்த ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி தில்லியில் பேசினார்கள். அதைத்தொடர்ந்து திசம்பர் 18-ஆம் தேதி இரு மாநில பாசனத்துறை அமைச்சர்களான துரைமுருகனும், பிரேமச்சந்திரனும் பேசினார்கள். இரு கட்ட பேச்சுகளும் தோல்வி அடைந்தன. அதன்பிறகும் அணையை ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்ற யோசனையை திமுக அரசு ஏற்றுக்கொண்டதால் பெரியாறு அணை வழக்கின் விசாரணை தேவையின்றி தாமதமானது. இது தமிழகத்தை பாதித்தது.


 

 

அதேநேரத்தில் 2011-ஆம் ஆண்டில் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு நடத்த பிரதமர் மன்மோகன்சிங் மூலமாக அப்போதைய கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அழுத்தம் கொடுத்தார். ஆனால், அந்த அழைப்பை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நிராகரித்ததால் தான் அடுத்த இரு ஆண்டுகளில் விசாரணை முடிவடைந்து, முல்லைப்பெரியாறு அணை வலிமையாக உள்ளது; அதை இடித்து புதிய அணை கட்ட தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் இந்த இரு நிகழ்வுகளையும் ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
 

முல்லைப்பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால், நீர்த்தேக்கப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகள் மூழ்கிவிடும் என்பதால் தான், அந்த முயற்சியை தடுக்கும் நோக்குடன் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. எனவே, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதிப்பது குறித்து கேரள அரசுடன் எந்த காலத்திலும் பேச்சு நடத்த மாட்டோம் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உறுதிபட அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.