![vyouth arrested in Dharmapuri in fathers friend passes away case](http://image.nakkheeran.in/cdn/farfuture/_b9Jog80FkixMm3wcq8IlKk-MU-l8BBGI-BSQ3f2tY0/1680936618/sites/default/files/inline-images/th-1_3769.jpg)
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் தினேஷ் வயது 28. தினேஷின் தந்தை கோவிந்தராஜ் என்பவரும், ஓசூர் கலவரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரும் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். நீண்ட நாள் நண்பர்களாகவும் இருந்துள்ளனர். தனது தந்தையின் நண்பர் என்ற முறையில் சசிகுமாருக்கும் தினேஷுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. சசிகுமார் மாந்திரீகம் செய்யும் வேலையையும் செய்து வந்துள்ளார். இதன் மூலம் பலரை ஏமாற்றியும் வந்துள்ளார்.
சசிகுமார் மாந்திரீகம் செய்வதாக அறிந்த தினேஷ், தனது நீண்ட நாள் தோழியை காதலியாக மாற்றி, திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்க வைக்க வேண்டும் என சசிகுமாரை நாடி உள்ளார். இதனைத் தொடர்ந்து தினேஷ் தனது தோழியை அழைத்து வந்து சசிகுமாரிடம் மாந்திரீகம் செய்யச் சொல்லி உள்ளார். மாந்திரீகம் செய்யும் பொழுது அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாரும் உடன் இருக்கக்கூடாது. ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் என சொல்லி தினேஷை வெளியே அனுப்பி உள்ளார் சசிகுமார்.
![youth arrested in Dharmapuri in fathers friend passes away case](http://image.nakkheeran.in/cdn/farfuture/t12U1aAUhGqCfi6eQs6mrN5pVFlsNvmiuLvgBQEz78k/1680936647/sites/default/files/inline-images/th-2_1407.jpg)
அதனை நம்பி தினேஷ், அவர்களை தனியாக விட்டு விட்டு காதலிக்காக காத்திருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சசிகுமாரிடம் இருந்து வெளியே வரும்பொழுது, அந்தப் பெண் அழுதபடி வந்துள்ளார். அவரிடம் தினேஷ் கேட்டபொழுது, சசிகுமார் தன்னை வன்கொடுமை செய்துவிட்டார் என அப்பெண் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் தனது உள்ளூர் நண்பரான குணாளன் மற்றும் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நண்பருடன் இணைந்து சசிகுமாரை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். கடந்த 4 ஆம் தேதி சசிகுமாரிடம், தனது பென்னாகரம் நண்பருக்கும் அவரது காதலியுடன் சேர்த்து வைக்க மாந்திரீகம் செய்ய வேண்டும் எனக் கூறி அவரை நைசாக பென்னாகரம் பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு வந்த சசிகுமாரிடம் பென்னாகரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மது அருந்தலாம் என ஆசை வார்த்தை கூறி வனப்பகுதியில் மது ஊற்றிக் கொடுத்துள்ளனர். அதிக மது போதையில் இருந்த சசிகுமாரை, கல்லால் தாக்கி படுகாயம் அடையச் செய்துள்ளனர். தொடர்ந்து மயக்கத்தில் இருந்த சசிகுமாரின் பிறப்புறுப்பையும் சிதைத்துள்ளனர். பின் சசிகுமார் இறந்ததை உறுதி செய்துகொண்டு அவர் முகத்தின் மீது பெரிய கல் ஒன்றை தூக்கிப்போட்டு, அவரது முகத்தை சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
![youth arrested in Dharmapuri in fathers friend passes away case](http://image.nakkheeran.in/cdn/farfuture/mWOBYmQStOLTsGcNk33yJSqeNXPknbXTcQoEyhy2YjE/1680936686/sites/default/files/inline-images/th-3_489.jpg)
இந்நிலையில் நேற்று ஓசூர் அட்கோ காவல்நிலையத்தில் சசிகுமாரின் மனைவி, தனது கணவரை இரண்டு நாட்களாக காணவில்லை எனவும் தனது கணவருடன் பணியாற்றும் கோவிந்தராஜின் மகன் தினேஷ் என்பவர் ஃபோன் மூலம் அழைத்ததின் பேரில் வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் புகார் அளித்தார்.
புகாரை ஏற்றக் காவல்துறையினர் சசிகுமாரின் மனைவியை பென்னாகரம் தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கு அடையாளம் தெரியாமல் முகம் சிதைந்து, இறந்து கிடந்த பிரேதத்தை அடையாளம் காட்ட பணித்தனர். அவர் அது தனது கணவர் என்பதை உறுதி செய்தார்.
அதேசமயம், தினேஷ்(28) மற்றும் குணாளன்(20) ஆகிய இருவரும் பென்னாகரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், தலைமறைவாக இருந்த தினேஷின் நண்பர் சந்தீப் (20) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.