
பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்ட 8 லட்ச ரூபாய் மதிப்பிலான, தேக்கு மரத்தாலான தேரினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மண்டலம் 3-ன் தலைவர் மு. மதிவாணன் ஆகியோர் பங்கு கொண்டு அதன் புறப்பாட்டினை உற்சவர் மண்டபத்தில் துவக்கி வைத்து தேரினை மாணிக்க விநாயகர் சன்னதியைச் சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலைநிறுத்தினர்.
முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கு கொண்டனர். அப்போது அமைச்சர்கள் முன்னிலையில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலின் பெண் ஓதுவார் ரூபாவதி மாணிக்க விநாயகர் பாடலை பாடினார். உற்சவ காலங்களில், வேண்டும் பக்தர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இத்தேரினை இழுக்கலாம் எனக் கோயிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி திருவெள்ளறை அருள்மிகு ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் திருக்கோவிலில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டும் திருப்பணி துவக்க விழாவினை அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு ஆகியோர் கட்டுமான பணிகளைத் தொடங்கி வைத்தனர்.