Skip to main content

ஊரடங்கு வேறுபடுவதால் முடங்கிய ஜவுளி தொழில்..!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

Textile industry paralyzed due to curfew ..!


மத்திய அரசு இந்த ஊரடங்கை தேசிய அளவில் பொது முடக்கமாக அறிவிக்காமல், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டதால், ஒவ்வொரு நாளும் ரூபாய் 150 கோடி மதிப்பில, 6.5 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதித்துள்ளது.


தமிழகத்தில், 10 லட்சம் விசைத்தறியில் நேரடியாக பத்து லட்சம் பேரும், மறைமுகமாக, இருபது லட்சம் பேரும் இந்த பணியை  செய்கின்றனர். தினமும், 150 கோடி ரூபாய் மதிப்பில், 6.5 கோடி மீட்டர் துணி உற்பத்தியாகும். ஒரு வாரத்துக்கு, 45 கோடி மீட்டர் துணி உற்பத்தியாகும். ஒரு தொழிலாளிக்கு வாரம், 3,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். தற்போது, வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலையில் ஊரடங்கு அறிவித்ததால், இந்த தொழில் முற்றிலும் பாதித்துள்ளது.


இதுபற்றி, தமிழ்நாடு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூறும்போது, விசைத்தறியில் தமிழகத்தில் உற்பத்தியாகும் துணிகள், குஜராத், டில்லி, மஹராஷ்டிரா, உ.பி. என பல மாநிலத்துக்கு அனுப்பி பிராசசிங், டையிங், பிரின்டிங், ஆயத்த ஆடைகளாக அவை மாற்றம் செய்து, பல மாநிலத்துக்கு விற்பனைக்கு செல்லும். இப்பணி, பல மாநிலத்தை மையமாக கொண்டது.


கரோனா முதல் அலையில், மத்திய அரசு, மார்ச், 22ல் தேசிய அளவில் பொது முடக்கம் அறிவித்தது. ஜூனில் தளர்வு அறிவித்து, விசைத்தறிகள் இயங்கின. இம்முறை வடமாநிலங்களில் கடந்த சில மாதத்துக்கு முன் முடக்கம் அறிவித்தபோது, தமிழகத்தில் முடக்கம் இன்றி விசைத்தறிகள் செயல்பட்டன. துணிகளை வடமாநிலம் அனுப்ப முடியாமல் தேங்கியது. இதனால் விலையும் சரிந்தது.


முதல் அலை முடக்கம் துவங்கி, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், கோவில், திருவிழா, பண்டிகை போன்றவை இல்லை. பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்கள் கூட முழுமையாக இயங்கவில்லை. எனவே, துணியின் தேவை குறைந்தது, எனவே விற்பனையும் இல்லை. 50 முதல், 60 சதவீதமே கடந்தாண்டு உற்பத்தி செய்தோம். தற்போது வடமாநில முடக்கத்தால் இரண்டு மாதம் துணிகள் தேங்கியது. தற்போது தமிழக முடக்கத்தால், துணி உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு, 2 மாதமாக, 30 சதவீத துணிகள் கூட உற்பத்தியாகவில்லை.


மத்திய, மாநில அரசுகள் இணைந்து முடக்கங்களை அறிவித்தால், தொழில், தொழிலாளர்கள், உற்பத்தி பாதிக்காது. தற்போதைய பாதிப்பை ஈடுகட்டுவதும், தொழிலாளர்களுக்கு வேலையை மீண்டும் வழங்குவதும் சிரமமானது. மீண்டும் விசைத்தறி உற்பத்தி துவங்கினாலும், பாதி அளவே தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியும். அவர்கள் வாழ்வாதாரம் காக்க மட்டுமே பணியை தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயல்பு நிலை திரும்பி, முழு உற்பத்தியை துவங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து அறிவிப்புகளை செய்ய வேண்டும் என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்