மதுஒழிப்பை முன்னெடுத்து தொடர்ந்து போராடி வருபவர் வழக்கறிஞர் நந்தினி. பல மதுஒழிப்பு போராட்டங்களை நடத்தியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 27ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நந்தினி, ஐ.பி.சி. 328ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் வாதாடினார். இதனால் அவர்மீதும், அவரது தந்தைமீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவருக்கு ஜூலை 5ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்ததும், ஆனால் அவரும், அவரது தந்தையும் சிறையிலிருந்ததால் திருமணம் நின்றுபோனதும், ஜூலை 9ம் தேதி வரை அவர்களை சிறையிலடைக்க திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கைதை கண்டித்தும், அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கக்கோரியும் நந்தினியின் சகோதரி நிரஞ்சனா இன்று தனது கல்லூரி முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். அவர் மதுரை சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (08.07.2019) அவர் போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.