Skip to main content

முதல்வர் பதவி விலகும் வரை திமுக சட்டசபை புறக்கணிப்பு: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

Published on 29/05/2018 | Edited on 29/05/2018
stalin


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை திமுக சட்டசபையை புறக்கணிக்கும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுவாயில் கதவில் தமிழக அரசின் அரசாணையும் ஒட்டப்பட்டது.

பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி மு.க.ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்து இருந்தார்.

இந்தநிலையில், திமுக கொண்டு வர கோரிய ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருப்பதால், ஒத்திவைப்பு தீர்மானம் தேவையில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால் திமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தடையை மீறி, சில கட்சிகள், சமூக விரோத அமைப்புகள், பங்கேற்று அரசுக்கு நெருக்கடி கொடுத்தன. கண்ணீர் புகைக்குண்டு, தடியடி நடத்தியும் கூட்டம் கலையாததால், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தூத்துக்கடி மக்கள் உணர்ச்சி வசப்பட்டாலும், யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாகக்கூடாது. தூத்துக்குடியில் தொடர்ந்து அமைதி நிலவ மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கூறினார்.

இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து முதல்வர் அறிக்கை தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, முதல்வர் அறிக்கையில், துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை இல்லை. தனியார் ஆலைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? துப்பாக்கிச்சூடு குறித்து வேதனை தெரிவிக்க முதல்வருக்கு 5 நாட்கள் தேவைப்பட்டது.

போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். சீரூடை அணியாத போலீசாரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபையை திமுக புறக்கணிப்பதாக கூறினார். தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சார்ந்த செய்திகள்