
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (06/01/2021) நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (07/01/2021) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08/01/2021 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 09/01/2020 அன்று தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் (சென்னை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டி (செங்கல்பட்டு) ஆகிய இடங்கிளல் தலா 6 செ.மீ. மழையும், தரமணி (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கொளப்பாக்கம் (செங்கல்பட்டு), அண்ணா யூனிவர்சிட்டி (சென்னை), திண்டிவனம் (விழுப்புரம்), சென்னை விமான நிலையம் (சென்னை) ஆகிய இடங்கிளல் தலா 5 செ.மீ. மழையும், தாம்பரத்தில் (செங்கல்பட்டு) 4 செ.மீ. மழையும், மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மணிமுத்தாறு (திருநெல்வேலி), எண்ணூர் (திருவள்ளூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சோழவரம் (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பாபநாசம் (திருநெல்வேலி), செய்யூர் (செங்கல்பட்டு), அம்பத்தூர் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) ஆகிய இடங்கிளல் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது." இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.