Skip to main content

"வீட்டில் ஒருவராக எண்ணி எனக்கு வாக்களியுங்கள்"- எடப்பாடி பழனிசாமி!

Published on 04/04/2021 | Edited on 04/04/2021

 

tn assembly election admk leader and cm edappadi palaniswami election campaign

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. 

 

இந்த நிலையில் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வனவாசியில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (03/04/2021) தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 

 

அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் கூறியதாவது, "எம்.ஜி.ஆர். சமாதி அருகே ஜானகியை நல்லடக்கம் செய்ய இடம் தர மறுத்தவர் கலைஞர். காமராஜர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தர மறுத்தவர் கலைஞர். காமராஜருக்கும், ஜானகிக்கும் கலைஞர் எடுத்த அதே முடிவைதான் கலைஞருக்கும் நாங்கள் எடுத்தோம். வீட்டில் ஒருவராக எண்ணி எனக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்யுங்கள். எனக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய எடப்பாடி தொகுதி விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் வளர்ச்சிப் பணிகளை முதல்வராக மேற்கொண்டது நான்தான். முதலமைச்சரான பிறகு எடப்பாடி தொகுதிக்கு 65 முறை சென்று வந்துள்ளேன்; ஸ்டாலின் அவரது தொகுதி பக்கமே போனதில்லை. கடந்த 45 ஆண்டு காலமாக எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வெற்றிப் பெற்றதில்லை" என்றார். 

 

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மணியை ஆதரித்து வாக்குச் சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஓமலூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வின் வெற்றிக் கோட்டை. ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தைப் போட்டு வெற்றி பெற்று விடலாம் என நினைக்கும் ஸ்டாலின் கனவு நிறைவேறாது. தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி; அ.தி.மு.க. கூட்டணி ஒருமித்த கருத்துக் கொண்ட வெற்றிக் கூட்டணி. வேளாண் மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை உன்னிப்பாகக் கவனித்து செய்து வருகிறோம். அ.தி.மு.க.விற்கு இயற்கையும், மக்களும் சாதகமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏழை என்ற சாதியே இல்லாத நிலையை உருவாக்குவோம். 2010- ஆம் ஆண்டு தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் கொண்டு வரப்பட்டது. அதனை ஜெயலலிதா எதிர்த்தார். தி.மு.க.வில் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாராலும் முன்னேற முடியாது" எனத் தெரிவித்தார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.