
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. இங்குப் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சிவகாசி அருகே உள்ள அம்மாப்பட்டியில் தங்கபாண்டி என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தப் பட்டாசு ஆலையில் இன்று (25.05.2025) அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு ஆலையின் ஒரு அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 10 கி. மீ. சுற்றளவில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.