Skip to main content

ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கூட வக்கில்ல... ராமதாஸுக்கு மு.ஞானமூர்த்தி பதில்...

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

 

திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், "ஏஜி"என அண்ணாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும். ஏற்கனவே கலைஞர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 

இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது வெற்று வாக்குறுதிகள் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். 

 

ramadoss - mg



இந்த நிலையில் ''மருத்துவர் ராமதாஸ் அறிக்கையும்- ஒரு இட ஒதுக்கீட்டுப் போராளியின் குரலும்...'' என்ற தலைப்பில் செந்துறை வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தி ராமதாஸின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்துள்ளார். மு.ஞானமூர்த்தி பாமகவில் மாநில தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு, 1991ல் ஆண்டிமடம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டவர். பாமக தலைமையிடம் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார்.
 

ராமதாஸ் : தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா?
 

போராளி : பாமக கூட்டங்களில் வன்னியர்களை பற்றி நீங்களும் உங்கள் மகனும் பேசி பல ஆண்டுகள் ஆகிறதே மறந்துவிட்டீர்களா?
 

ராமதாஸ் : தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்.
 


போராளி : இது வெற்று வாக்குறுதிகள் அல்ல. சொன்னதைத்தான் செய்வார்! செய்வதைத்தான் சொல்வார் மு.க. ஸ்டாலின். 




ராமதாஸ் : விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. 



போராளி : வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்றவுடன் அதிமுகவினரை திருப்திப்படுத்த இரவு முழுதும் தூங்காமல் அறிக்கை தயாரித்தவர் நீங்கள்தான். 
 

ராமதாஸ் : மக்களவைத் தேர்தலில் நகைக் கடனை தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி, ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகள் ஆக்கிய ஸ்டாலின், இப்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார்.
 

போராளி : திமுக ஆட்சிக்கு வரும்போது கண்டிப்பாக நகைக்கடன் தள்ளுபடி செய்வார் மு. க. ஸ்டாலின். உங்களைப்போல் ஒவ்வொரு தேர்தலிலேயும் வன்னியர்களை வைத்து  வியாபாரம் செய்தவரில்லை. 


 


ராமதாஸ் : ஆனால் பாவம்.... அத்தைக்கு மீசை முளைத்தால் என்ன நடக்கும்? என்று கற்பனையாக எழுதப் பட்ட கட்டுரையைப் படித்தால் எத்தகைய உணர்வு ஏற்படுமோ, அதேபோன்ற உணர்வு தான் ஸ்டாலின் அவர்களின் அறிக்கையை படிக்கும் போதும் ஏற்படுகிறது.
 

போராளி : ஒவ்வொரு தேர்தலிலேயும் அடுத்த முதல்வர் அன்புமணிதான் என கற்பனைக் குதிரையை கட்டவிழ்த்து விட்டு இன்று ஒரு எம்எல்ஏவுக்கு கூட வக்கில்லாத நீங்கள் பேசுவதுதான் அத்தைக்கு மீசை. 
 

ராமதாஸ் : வேலூர் தொகுதி தேர்தலின் போதே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது என்பதைக் கூட உணராமல் கற்பனையில் மிதக்கிறார் மு.க.ஸ்டாலின்.
 

போராளி : வேலூர் தொகுதியில் ஓட்டுக்கு ரூ. 800 முதல் ரூ. 1000 வரை கொடுத்தும், உங்கள் கூட்டணி பலம் இருந்தும், ஆளும் கட்சி என்கிற அதிகார பலம் இருந்தும் அதிமுக தோற்றதே அது தெரியவில்லையா? உங்களுக்கு.

 

சார்ந்த செய்திகள்