Skip to main content

“அனைத்து சூதாட்ட செயலிகளையும் தடை செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளேன்" -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020
Puducherry Chief Minister Narayanasamy interview!

 

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (21.10.2020) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 

"புதுச்சேரியில் கடந்த ஆறு மாத காலமாக கரோனா பரவாமல் இருக்க அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தற்போது நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 15 லட்சம் மக்கள் தொகையில் 2.27 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

புதுச்சேரியில் ஆன்லைனில் ரம்மி விளையாடி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சூதாட்டத்தால் பலர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். ஆகவே இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ரம்மி மட்டுமல்ல அனைத்து சூதாட்ட செயலிகளையும் தடை செய்ய வலியுறுத்தியுள்ளேன்.

 

புதுச்சேரி சிறையில் இருந்து ரௌடிகள் போன் மூலம் தொடர்பு கொண்டு மாமூல் கேட்கின்றனர். இதனால் வெளியில் கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு அங்குள்ள வாடர்ன்கள் உதவி செய்கின்றனர். சிறையில் இருக்கும் ரவுடிகள் வெளியில் உள்ள ரவுடிகளை கொண்டு மாமூல் கொடுக்க சொல்லுகின்றனர். இதனால் இதுபோன்று நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அளவுகளை அதிகரிக்க செய்ய உள்ளோம். இதனை கட்டுப்படுத்த வெளியில் உள்ள ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சண்டே மார்க்கெட் இயங்க ஏ.எஃப்.டி திடலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இயங்குவதற்கான  நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் "  இவ்வாறு அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.