
நாய் கடித்ததால் மூன்று வயது சிறுமியை பெற்றோர் அவசர அவசரமாக இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த பொழுது போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் சிறுமி சம்பவ இடத்தியிலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவர் தன்னுடைய மூன்று வயது மகளை நாய் கடித்து விட்டதால் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் ஹெல்மெட் அணியாமல் வருவதை அறிந்து அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்பொழுது நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.
இதில் மூன்று வயது சிறுமி ஹிருதிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த சிறுமியின் உடலை மடியில் போட்டுக்கொண்டு தாய் அழுத காட்சிகள் பார்ப்போர் மனதை கலங்க வைத்தது. இந்த சம்பவத்தில் போலீசாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சிறுமியின் உயிரிழப்புக்கு நாய் கடித்ததும் ஒரு காரணம் என்பதால் சிறுமியை கடித்த நாயை அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கொன்றுள்ளனர்.