
3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம்,பஞ்ச்குலா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே நேற்று இரவு மர்மமான முறையில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை கண்டு சந்தேகமடைந்த அங்குள்ள பொதுமக்கள், கார் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது காரின் உள்ளே 3 குழந்தைகள் உள்ளே மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, இச்சம்பவம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். இறந்தவர்கள் பிரவீன் மிட்டல் (42), அவரது வயதான பெற்றோர், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என போலீசார் அடையாளம் கண்டனர். கடும் கடன் மற்றும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்த பிரவீன் மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் பஞ்ச்குலாவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காருக்குள்ளேயே குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு குடும்பத்தினர் எழுதி வைத்திருந்த கடிதத்தை மீட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.