Skip to main content

தமிழக - கேரளா எல்லையில் பெண்கள் திடீர் சாலை மறியல்!

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
ladies


தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக கேரள எல்லையான குமுளி பகுதியில் இருக்கும் இடுக்கி மாவட்ட பகுதிகளில் தோட்டங்களுக்கு காபி, ஏலம், மிளகு பறிக்க செல்லும் பெண்களை இழிவாக பேசிய குமுளி சார்பு ஆய்வாளரைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், தமிழக கேரள போக்குவரத்து இரண்டு மணிநேரம் துண்டிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை, தேவாரம், பாளையம், கம்பம், கூடலூர் உள்பட பல பகுதிகளில் இருந்து தினமும் காலை, ஆயிரக்கணக்கான பெண்கள், தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் இடுக்கி மாவட்ட தோட்டங்களுக்கு தனியார் ஜீப் மூலம் வேலைக்குச் செல்வது வழக்கம். இப்படி தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பெண்கள், மதுரை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிப்பர்.
 

ladies


நூற்றுக்கணக்கான ஜுப்களில் செல்லும் போது, குமுளி காவல்நிலைய செக்போஸ்டில் ஒரு வாகனத்தை நிறுத்திய குமுளி சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ்ராஜா, ஜுப்பில் அமர்ந்திருந்த பெண்களை இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக ஜுப்களில் வந்த மற்ற பெண்களும் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் காவல்துறையினர், சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அந்த கூலி தொழிலாளி பெண்களை சமாதானம் செய்து வேலைக்கு அனுப்பி வைத்தனர். எல்லைப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு வரும் பெண்கள், ஒரே ஜுப்பில் இருபது பேர் வரை ஆபத்தாக பயணம் செய்வது வாடிக்கை.
 

ladies


அதே நேரம், இப்பெண்களை ஏற்றிவரும் சில வாகனங்களுக்கு முறையான அனுமதியும் இல்லை. இதனால் பல முறை விபத்தை சந்தித்திருக்கிறார்கள் இப்பெண்கள். இந்நிலையில் வாகன சோதனை செய்த போது தான் சார்பு ஆய்வாளர், பெண்களை இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தததின் பேரில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்ததாக தெரிகிறது.

சார்ந்த செய்திகள்