Skip to main content

‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிலைப்பாடு என்ன?’- த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
T.V.K. leader Vijay's announcement What is the stand on the Vikravandi by-election?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே. எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுவன் மீது சரிந்து விழுந்த விஜய்யின் பிறந்தநாள் பேனர்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Vijay  birthday banner fell on the boy

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் விஜயபுரம் என்ற பகுதிக்கு செல்லும் வழியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு பிறந்தநாள் விழா பேனரை அவரது ரசிகர்களான தொண்டர்கள் வைத்திருந்தனர். ஜீன் 25 ஆம் தேதி மாலையில் மழை பெய்வதற்கு முன்பாக பலத்த காற்று வீசியது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான விஜய் பிறந்த நாள் டிஜிட்டல் பேனர் காற்றின் வேகத்தில் நிற்க முடியாமல் கீழே சாய்ந்தது. டிஜிட்டல் பேனர் சாய்கின்ற போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் மேல் விழுந்தது.

நல்வாய்பாக பேனர் சிறுவன் மீது விழுந்த போது அதே இடத்தில் ஒரு இரு சக்கர வாகனமும் நின்று கொண்டிருந்தது. சிறுவன் மீதும் இருசக்கர வாகனத்தின் மீதும் அந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தின் உதவியால் அந்த சிறுவனுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. டிஜிட்டல் பேனர் விழுந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அதை தூக்கி அதன் அடியில் சிக்கிக் கொண்ட சிறுவனை மீட்டனர். சிறுவன் காயங்கள் இன்றி வீட்டிற்கு சென்றான். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் தொடர்ந்து அதே இடத்தில் அகற்றப்படாமல் இருந்ததால் காற்றின் வேகத்தில் அது சாய்ந்து சிறு விபத்தை ஏற்படுத்தியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரில் அரசியல் கட்சி பேனர் ஒன்றில் கீழே விழுந்து ஒரு இளம் பெண் மரணத்தை சந்தித்தார் அதன் பின் பேனர் வைப்பதில் சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது. டிஜிட்டல் பேனர் வைக்கப்படும் பொழுது, எந்தப்பகுதியில் வைக்கிறார்களோ அந்த பகுதியில் நகராட்சி, காவல்துறை, வருவாய் அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்று அதன் பின்பே வைக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை எந்த அரசியல் கட்சிகளும் தனியார் அமைப்புகளும் பின்பற்றுவதே இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

Next Story

ராகுல்காந்திக்கு த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Congress leader Vijay congratulates Rahul Gandhi!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி கடந்த 9ஆம் தேதி பதவியேற்றார். அதனை தொடர்ந்து 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (24-06-24) தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து, நேற்று மாலை இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்தார். 

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்திக்கு, நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘காங்கிரஸ் கட்சியினராலும், அதன் கூட்டணி கட்சியினராலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துகள்.