Skip to main content

நெல்லையில் ஸ்கோர் செய்த பா.ஜ.க; கொந்தளிக்கும் திமுகவினர்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
DMK leadership angry as BJP vote count increased in Nellai

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின் போது திருநெல்வேலி மக்களவைக்குப் போட்டியிட்ட தி.மு.க.வின் கூட்டணி சார்பில் நின்ற தி.மு.க.வின் ஞானதிரவியம் 5,22,623 வாக்குகள் பெற்று எம்.பி.யானார். அவரை எதிர்த்து பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.வின் மனோஜ் பாண்டியன் 3,37,166 வாக்குகள் பெற்றார்.

தற்போதைய திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 5,02,296 வாக்குகள் (கடந்த தேர்தலை விட 20,327 வாக்குகள் குறைவாக) பெற்று வெற்றி கண்டார். அவரோடு தனியாக மல்லுக்கு நின்ற பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் கிட்டத்தட்ட மலைக்க வைக்கிற அளவுக்கு கிராசிங்காக 3,36,676 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இது தேர்தலில் வேட்பாளர்கள் பெற்றவாக்குகளின் கணக்கு பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், தமிழகம் முழுக்க 39+1 - 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி 100க்கு 100 என்று 40 தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாக அள்ளினாலும், நெல்லையில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன், கூட்டணி பலமின்றி ஒற்றை நபராகக் களத்தில் இத்தனை (336676) அளவுக்கு க்ராசிங்காக வந்ததை திகைப்புடன் பார்க்கிறதாம்.

DMK leadership angry as BJP vote count increased in Nellai

தமிழகத்தின் பிற தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட்டு வாக்குகளைப் பெற்றாலும் குறிப்பாக திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் இந்த அளவுக்கு ரீச்சானதின் பின்னணியை ஏற்கனவே தி.மு.க. தலைமை சந்தேகக் கண்களோடு தான் ஆரம்பம் முதலே கண்காணித்து வந்தது. இதன் பின்னணியில் உள்ளடி இருப்பதை மேலோட்டமாக உறுதிபடுத்திய தி.மு.க.வின் தலைமை, தேர்தல் ஆரம்ப காலகட்டங்களில் நடந்தவைகளையும், கட்சியின் குறிப்பிட்ட தரப்பினரின் தேர்தல் பணிகளில் ஏற்பட்ட தொய்வுகள் பற்றி நெல்லை மாநகர மாவட்ட கட்சியினர் தலைமைக்கு அனுப்பிய புகார்கள் என்று இரண்டையும் ஒப்பீடாக எடுத்துக் கொண்டு விசாரணைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதால் நெல்லை மாநகர தி.மு.க அளவில் தலைமையின் நடவடிக்கை பாயலாம் என்ற கலக்கமிருப்பதைச் சுட்டிக்காட்டுகிற தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களே, இனி வரும் காலத்தில் அது உள்ளடிகளில்லாத தேர்தல் பணிகளுக்கு உத்தரவாதமாகும் என்பவர்களே திருநெல்வேலி எம்.பி. தேர்தலில் தி.மு.க.வில் நடந்த உள்குத்துகளைப் பற்றி விவரித்தார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியான நேரத்தில் நெல்லையில் பா.ஜ.க. தனித்து போட்டியிட வாய்ப்பில்லை. ஏனெனில் அது ஒற்றையாக களம் காண்கிற அளவுக்கு தொகுதியில் பேஸ்மெண்ட் கிடையாது என்று பரவலாகப் பேசப்பட்டது. இதற்கிடையே நான் தான் பா.ஜ.க.வின் திருநெல்வேலி வேட்பாளர் என்று நயினார் நாகேந்திரன் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டதுமில்லாமல் ஸ்ட்ரெயிட்டாக தேர்தல் பிரச்சாரத்திலிறங்கியதை பிற கட்சிகள் வியப்புடன் பார்த்தன. பா.ஜ.க.விற்கான தகுதியான வேட்பாளர்கள் சிக்காமல் போனதால் வேறு வழியின்றி பா.ஜ.க. நயினார் நாகேந்திரனை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிலை.

DMK leadership angry as BJP vote count increased in Nellai

தேர்தலில் ஜெயித்தால் மத்திய அமைச்சராகி விடலாம் என்ற திட்டத்தில் அதற்கான மூவ்களை மேற்கொண்ட நயினார் கரன்சியை தாமிரபரணியாய் தொகுதியில் ஓடவிட்டவர், தனக்கான இமேஜை அதிகரித்துக் கொள்ள நெல்லை எம்.பி. தொகுதிக்குட்பட்ட நெல்லை அம்பை என்று இரண்டு தொகுதிகளிலும் அடுத்தடுத்து பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்தையும் நடத்தி பிரம்மாண்டப் படுத்தியிருக்கிறார். மேலும் தனக்கான வாக்குபலத்தை அதிகரித்துக் கொள்ள தொகுதியில் தான் சார்ந்த சமூக வாக்குகளை ஒருங்கிணைத்தால் மேக்சிமம் ரீச் ஆகிவிடலாம், பிற சமூக மக்களையும் தன் பக்கம் திருப்பினால் வெற்றிக் கோடு அருகில் என்ற ப்ளானில் அம்பை தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையாவின் துணையுடன் ஸ்வீட் பாக்ஸ்களை தேவையான அளவிற்கு ஏரியா சார்ந்த முக்கிய புள்ளிகளின் துணையோடு இறக்கியவர் ஓட்டுக்கு முன்னூறு என்ற லெவலிலும் கவனிப்பு.

இதனால் அ.தி.மு.க. அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் பண்ணையார் சார்ந்த பிரிவு சார்ந்தவர்களின் மறைமுகமான ஆதரவும் கிடைத்திருக்கிறது. இந்த திரை மறைவு காய் நகர்த்தலில் நெல்லை தி.மு.க. புள்ளிகளும் அடங்கியது பற்றிய தகவல்களுடன் நெல்லை ஜங்ஷன் பகுதியின் தி.மு.க. நிர்வாகியான கடவுள் பெயரைக் கொண்ட அவர், பண்ணையாருக்காக பகிரங்கமாக வேலை பார்த்தது பொறுப்பு அமைச்சருக்குத் (தங்கம் தென்னரசு) தெரிந்தும் கூட அவர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை போன்ற தொகுதியில் நடக்கிற அனைத்தும் புகாராகக் கட்சித் தலைமைக்குப் போயிருக்கிறது. அத்துடன் நெல்லை தொகுதியில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்ற பிம்பம் உருவானது. இதையடுத்தே அலர்ட் ஆன தி.மு.க.வின் தலைமை, நெல்லை தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணியான காங்கிரஸ் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தொகுதி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. இறுதிக் கால கட்டமான வாக்குப் பதிவு நாளின் போது கூட பாளை, அதற்குட்பட்ட மேலப்பாளையம் பகுதிகளின் வாக்குச் சாவடிகளில் காலை முதலே தி.மு.க.வின் பொறுப்பாளர்களின் தலை காணாமல் போனதை வாய்ப்பாக்கிக் கொண்ட பண்ணையார் தரப்பினர் ஓட்டுக்கான பட்டுவாடாவை தடையின்றி சரசரவென முடித்திருக்கின்றனர்.

DMK leadership angry as BJP vote count increased in Nellai

இதனால் நெல்லையில் பா.ஜ.க. கரையேறும் என்ற பேச்சுக்கள் கனமாக அடிபட்டது. எதிர்பார்ப்புகள் பல்சை எகிற வைத்தன. தி.மு.க.வின் தலைமையைக் கூட யோசிக்கவைத்தது. இப்படியான பா.ஜ.க. பண்ணையாரின் ஜெகஜ்ஜால வித்தை காரணமாகவே திருநெல்வேலி தொகுதி யாருக்கு என்ற தவிப்பிற்கிடையே அம்பையின் ஒரு பகுதி, நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட தொகுதிகள் முழு அளவில் கை கொடுக்க தி.மு.க.வின் கூட்டணியான காங்கிரசின் ராபர்ட்புரூஸ் 5,02,296 வாக்குகள் வெற்றிபெற்றிருக்கிறார். 3,36,676 என எதிர்பார்க்காத அளவுக்கு வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரனோ, நெல்லை சட்டமன்ற தொகுதியில் எங்களுக்கு சற்று கூடுதலாக வாக்குகள் கிடைத்துள்ள போதிலும் பாளை சட்டமன்ற தொகுதியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளன என்று தெம்பாகவே சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.

இப்படி தவிப்பிற்கிடையே நெல்லை பாராளுமன்றத்தை தி.மு.க. கூட்டணி கைப்பற்றினாலும் இதே தவிப்பும், படபடப்பும் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரக் கூடாது. அதற்குள்ளாக தலைமை, மாநகர கட்சியில் கழித்தல் கூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார்படுத்த வேண்டும், என வேதனையும் கொதிப்புமாய் வெளிப்படுத்துகிறார்கள் தி.மு.க.வினர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

லண்டன் சென்று வந்த மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
chief minister discussion with students who visited London

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லண்டனுக்குச் சென்று பயிற்சி பெற்றுத் திரும்பிய மாணவர்கள் இன்று தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பள்ளிக் கல்வி முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பைத் தொடர்வதற்கான 'நான் முதல்வன்' திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நான்  முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 25 பேர் கடந்த வாரம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக லண்டன் சென்றிருந்தனர். இரண்டு வார பயிற்சிக்குப் பின் சென்னை திரும்பி நிலையில் இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாணவ  மாணவியர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.  

Next Story

'இன்றே எழுதி வைத்துவிடலாம்; அந்தக் கதிதான் அதிமுகவுக்கு' - கி.வீரமணி விமர்சனம்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14 ஆம் தேதி (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “ஏற்கெனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிடை இழந்தது. தேர்தல் ஆணையம் இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக பயப்படுவது ஏன்? இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992-இல் பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தலில் முதன் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் முறையை அறிமுகப்படுத்தியதும் அதிமுக தான்'' எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார்.

இந்நிலையில் பாஜகவிற்கு உதவுவதற்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருப்பதாக திராவிடர் கழகம் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணித்திருப்பது என்பது மறைமுகமாக பாஜகவை ஆதரிப்பதே ஆகும். இது அதிமுக கட்சியின் பலகீனத்துக்கான அறிகுறியே. அரசியல் கட்சியின் கடமையை நிறைவேற்றுவதில் இருந்து அதிமுக பின்வாங்குவது உள்நோக்கம் கொண்ட செயலாக இருக்கிறது. தேர்தல் புறக்கணிப்பால் அதிமுகவின் பொதுமதிப்பு காணாமல் போய்விடும். இது அக்கட்சிக்கான தோல்வி அச்சத்தை காட்டுகிறது. தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்கள், வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவுக்கு இருப்பதாக கூறப்படும் பொதுமதிப்பு இழக்கும் நிலை உருவாகும்.

 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

தேர்தலில் நிற்பதில்லை என்ற முடிவுக்கு அதிமுக சொல்லும் காரணங்கள் பொது அறிவு பொருத்தமானதாக இல்லை. ஆம்புலன்ஸை பணம் கடத்த பயன்படுத்தியவர்கள் அதிமுகவினர் என்பதை நாடறியும். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்து இருந்தாலும் பிரச்சாரத்தில் மோடியை அதிமுக தலைவர்கள் விமர்சிக்கவில்லை. மராட்டியத்தில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட கதிதான் அதிமுகவிற்கும் ஏற்படும் என்பதை இன்றே எழுதி வைத்துவிடலாம். பாஜக கூட்டணியில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாமக கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பாமக மீது தமிழ்நாட்டு மக்களின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும்? பாமகவின் எந்தப் பிரச்சாரமும் இனி எடுபடாது. விக்கிரவாண்டி தேர்தலில் திமுக ஆட்சியின் மக்கள் வளர்ச்சி திட்டங்கள் அமோக வெற்றியைப் பெற்று தரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.