Skip to main content

முட்டிக்கொள்ளும் தலைவர்கள்; காங்கிரஸ் - திமுக கூட்டணியிடையே சலசலப்பு

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Controversy between Selvaperunthagai and EVKS Elangovan in Congress

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் தமிழகத்தில் விரைவில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஏனென்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுகதான் தமிழகத்தை ஆட்சி செய்துவரும் நிலையில் செல்வபெருந்தைகையின் கருத்து காங்கிரஸ் கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “மீண்டும் காமராஜர் ஆட்சி வேண்டும் என்கின்றனர்.பாசிசத்திற்கு எதிராக,சமூக நீதியைச் சமத்துவத்தை பிரகனப்படுத்தி எங்கெல்லாம் ஆட்சி நடக்கிறதோ  அது எல்லாமே காமராஜர் ஆட்சி தான்.அந்த வகையில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள திராவிட மாடல் ஆட்சியைக் காமராஜர் ஆட்சி எனச் சொல்வதில் எனக்குச் சிறிதும் தயக்கம் கிடையாது” என்றார். செல்வபெருந்தையில் கருத்திற்கு இது பதிலடியாகவே பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்  சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் என பல முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கட்சியினர் மத்தியில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “நாம் பிறரைச் சார்ந்திருக்கப் போகிறோமா? அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. நமக்குத்தான் அனைவரையும் ஆதரிக்கின்ற, குரல்கொடுக்கின்ற சித்தாந்தம் இருக்கிறது. வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது. பாஜகவில் இதுவரை ஏன் ஒரு இஸ்லாமியர்களோ, கிறிஸ்துவர்களோ அமைச்சராக்க முடியவில்லை? இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 99 வேட்பாளர்களை வென்றிருந்தார்கள். மேலும் சுயட்ஜயாக போட்டியிட்ட இரண்டு பேர் காங்கிரஸ் கட்சிக்கு வந்திருக்கிறார்கள் தற்போது நமது கணக்கு 101 ஆக மாறியுள்ளது. 

தற்போது மத்திய அமைச்சராக இருக்கக்கூடியவர்களே காங்கிரஸ் கட்சிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நம்மை விட்டி பிரிந்து சென்றவர்கள் எல்லாம் ராகுலில் கரங்களை வழிப்படுத்தக் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தங்களை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.  வரலாறு மாறுகிறது. அதனால் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் நாம் சொல்லுகின்ற ஒரு செய்தி, எந்த திசையை நோக்கிச் சொல்லப்போகிறோம்? சார்ந்து இருக்கப் போகிறோமா? தோழமை என்பது வேறு. தோழமைக்கு உண்மையாக இருப்பதில் நமக்கு நிகரானவர்கள் வேறு யாரும் கிடையாது. உண்மை என்றால் காங்கிரஸ் உண்மையாக இருக்கும் தோழமை என்றால் உண்மையான தோழமையாகக் காங்கிரஸ் இருக்கும். ஆனால் எவ்வளவு காலம் சார்ந்திருக்கப் போகிறோம்? என்ற கேள்வி தற்போது எழுகிறது. அதற்கான விடை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்” என்றார். 

Controversy between Selvaperunthagai and EVKS Elangovan in Congress

இதனைத் தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “இன்றைக்குத் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதி வெற்றிபெற்றிருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு, திமுகவும், முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. தனித்து நின்றோம். கன்னியாகுமரி, சிவகங்கை தொகுதிகளில் மட்டும்  ஒரு லட்சம் வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்தோம்; மற்ற அனைத்து தொகுதிகளிலும் டெப்பாசிட்டை இழந்தோம். யாருக்கு இங்கே ஆசையில்லை. நாம் வரவேண்டும் என்பதில் எனக்கு ஆசையில்லாமலா இருக்கிறது. நாம் வரவேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் கூட, நம் எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் தற்போது முக்கியம். எனவே அதற்கான பாதையை தேர்ந்தெடுத்துப் போக வேண்டுமே தவிர, நான் தான் வெல்லுவேன், நான் தான் தனியாக நிற்பேன், தனியாக தோற்பேன் என்றால் அது உங்களில் இஷ்டம். நான் யாருக்கும் பகைவன் அல்ல; உங்களுக்கு இருக்கிற அதே காங்கிரஸ் உணர்ச்சி எனக்குள்ளும் உண்டு. 

தமிழகத்தில் காங்கிரஸை காலூன்ற வைத்த பெரியாரின் குடும்பத்திலிருந்து வந்திருக்கின்றேன். காமராஜரின் ஆட்சி அமைக்க வேண்டும் என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடு உள்ளது. ஆனால், அதற்குக் கொஞ்சம் தந்திரம் வேண்டாமா? முதலில் எதிரியை ஒழிக்காமல் எப்படி அந்த இடத்தை பிடிப்பீர்கள் என்று யோசியுங்கள். நாற்காலி காலியானதானே நீங்கள் அதில் போய் உட்கார முடியும். இந்த கட்சிக்காகத் தியாகம் செய்த ராஜீவ்காந்தி, இந்திரா காந்தியை நினைத்து பாருங்கள் தற்போது தியாகம் செய்துகொண்டிருக்கும் சோனியா காந்தியை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் தியாக செய்வார்கள் நாம் பதிவுபெற வேண்டும் என்று நினைத்தால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று எண்ணிப்பாருங்கள். இந்த மேடையில் இருக்கும் அனைவரும் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு திமுகதான் காரணம். ஆசை இருக்க வேண்டும்; இல்லை என்று சொல்லவில்லை. அது பேராசையாகி கடைசியில் ஒன்றுமில்லாமல் போய்விடக்கூடாது” என்று தெரிவித்தார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் ஒன்று சொல்ல, அதற்கு நேர் மாறாகக் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒன்று சொல்வது இருவருக்கும் இடையே வார்த்தை போராக மாறியிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சி இடையே மட்டுமல்ல திமுக - காங்கிரஸ் கூட்டணிகளிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“நீட் தேர்வில் பணம் கொடுப்பவர்களுக்கு ஆணையம் சாதகமாக இருக்கிறது” - செல்வப்பெருந்தகை

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Selvaperunthagai strongly oppose NEET exam

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இனியும் தேவையா நீட் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கி.வீரமணி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ், இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “அரியலூர் அனிதா மரணத்திற்குப் பின்னர் நீட் தேர்வு தேவையா எனத் தேசம் முழுவதும் கேள்வி எழுந்தது. ஜெயலலிதா இருந்தவரை அனுமதிக்காத நீட் தேர்வு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உள்ளே நுழைந்து. தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் ரத்து மசோதாவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இப்படி ஒரு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு இதுவரை அமைந்ததில்லை. நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது என ஒரு பரப்புரையைச் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தடுப்பணையில் நீட் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு சங்கல்ஃப் என்ற இயக்கம் மனுதாரராகப் போய் நிட்டை நடத்தலாம் என அனுமதியைப் பெற்றுக் கொண்டு வந்தார்கள். 

நீட் நடத்துவதில் ஆளுநரும், பிரதமரும் தீர்மானமாக உள்ளனர். நீட் என்பது பல கோடி வருமானம் தரக்கூடிய விஷயமாக மாறி உள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வது, ஆசிரியர்களே தேர்வு எழுதுவது, சட்டத்தில் இல்லாததை எல்லாம் மோடியின் அரசு நீட்டில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. நீட் வணிகமயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு பள்ளிகளிலும் நீட் பயிற்சி மையங்கள் அலுவலகத்தை திறக்கிறார்கள். பள்ளிகளில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்விற்கும் இலட்ச கணக்கில் பணத்தை கட்ட வேண்டும். கிராம புறமானவர்கள் எப்படி இதில் சேர முடியும்? ஏழை எளிய மாணவர்கள் இந்த தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவர்? இது சாதாரண மக்களுக்கே தெரியும் போது மாமனிதன் என்று சொல்லக்கூடிய மோடிக்கும், மத்திய அரசுக்கும் தெரியவில்லை. 

நீட் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த தற்கொலை விவாகரத்தில் பிரதமர், மத்திய அரசும் மௌனமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு குழந்தைகள் தேர்வு எழுதச் சென்றால் ஆடையை கத்தரிப்பது, தாலி உள்ளிட்ட ஆபரணங்களைக் கழட்ட சொல்லும் ஆணையம், பணம் கொடுப்போருக்குச் சாதகமாக இருக்கிறது. தேசிய தேர்வு முகமையில் எப்படிப்பட்ட அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை வலது இடது புறங்களில் வைத்துக்கொண்டு நடக்கும் இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி இப்போதே நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வை மாநிலங்கள் எப்போது ஏற்றுக் கொள்கிறதோ அப்போது நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதுவரை நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர வேண்டும்” விடக்கூடாது" என்றார்.

Next Story

ராகுல் காந்தி பிறந்த நாள்; நலத்திட்ட உதவிகளை வழங்கிய காங்கிரஸ் 

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Congress has provided welfare assistance on the occasion of Rahul Gandhi's birthday

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல்காந்தி எம்.பி பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் வடக்கு மாவட்டம் முழுவதும் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மண்ணச்சநல்லூர், துறையூர், லால்குடி, முசிறி, தா.பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம். புள்ளம்பாடி உள்ளிட்ட 11 வட்டாரங்களில் கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் பஸ் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள  பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.


தொடர்ந்து பட்டத்தம்மாள் தெருவில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பிரமிளா, மகளிர் அணி சுதா, வட்டார தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுக்குழு அப்துல் காதர், சேவாதளம் தெற்கு மாவட்ட தலைவி லட்சுமி, சேவா தளம் வடக்கு மாவட்ட தலைவி மேரி ஆஷா, வட்டார பொறுப்பாளர் செல்வம், மண்ணச்சநல்லூர் நகர பொறுப்பாளர் பாட்ஷா, நிர்வாகிகள் செல்வராஜ், மாசிலாமணி, பழனியாண்டி, கணேசன், மூர்த்தி, சந்தியாகு அலெக்ஸாண்டர் உட்பட திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 

அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட தலைவர் திருச்சி கலை கலந்து கொண்டு கட்சிகொடி ஏற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.