Skip to main content

அண்ணனை மிஞ்சிய தம்பி; கோட்டையைப் பிடித்த சினிமாகாரன் - மாண்புமிகுவான பவன்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Pawan Kalyan became Deputy Chief Minister of Andhra Pradesh

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜ 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆந்திராவில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம்.. சந்திரபாபு நாயுடுவை காட்டிலும் அதிகமாக பேசப்படுபவராக மாறியிருக்கிறார் பவன் கல்யாண். 

ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண்.. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருகிறார். தனக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள பவன் கல்யாண்.. நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி சேர்ந்து.. தான் போட்டியிட்ட 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2 எம்பி தொகுதிகளிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றார். வழக்கமாகத் தனது அரசியல் நிகழ்வுகள் என்றாலும் சரி.. ரசிகர்களைச் சந்திப்பது என்றாலும் சரி பிரம்மாண்டமாகக் கூட்டத்தைக் கூட்டி மாஸ் காட்டுவது பவன் கல்யாணின் வழக்கம். அதே போல், இந்த தேர்தலில்.. பவன் கல்யாண் நடத்திய ரோடு ஷோ பிரச்சாரங்கள்.. மற்றும் பாய் பாய்  ஜெகன் போன்ற முழக்கங்கள் தெலுங்கு தேச கட்சியின் வெற்றிக்கு உதவியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இத்தகைய அரசியல் சூழலுக்கு மத்தியில் பவன் கல்யாணின் சொந்த அண்ணனான ஆந்திர மெகா ஸ்டார்  சிரஞ்சீவி கடந்த 2008ம் ஆண்டில் பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். 2009இல் ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. அதில், 17 சட்டசபை தொகுதிகளில் வென்ற சிரஞ்சீவி கட்சி, லோக்சபாவில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பிறகு கடந்த 2011இல் சிரஞ்சீவி தனது கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக்கொண்டார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்ட சிரஞ்சீவி, கடந்த 2012இல் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே, 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியைப் பறிகொடுத்ததும் 2018 வரை ராஜ்யசபா எம்பியாக தொடர்ந்த சிரஞ்சீவி அதன்பிறகு தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. தற்போது அவர் காங்கிரஸ் கட்சிக்காக எந்த வித பிரச்சாரமும் செய்யவில்லை. ஆந்திர அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிரஞ்சீவி 10 ஆண்டுகளுக்குள் பியூஸ்போனதாக விமர்சிக்கப்பட்டது.

Pawan Kalyan became Deputy Chief Minister of Andhra Pradesh

அரசியலில் தன்னுடைய அண்ணன் சிரஞ்சீவி கானல்நீர் போல் காணாமல்போன சமயத்தில் 2014இல் ஜன சேனா என்ற கட்சி தொடங்கிய பவன் கல்யாண், பல்வேறு சறுக்கல்களை எதிர்கொண்டார். 10 ஆண்டுகளாக பவன் கல்யாணுக்கு கிடைக்காத அங்கீகாரம் தற்போது 2024 தேர்தலில் கிடைத்திருக்கிறது. 1996-ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பவன் கல்யாண். முப்பது படங்களைக் கூட முழுதாக எட்டிப்பிடித்திடாத பவன் கல்யாண், சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டுவார். இதனால், பவன் கல்யான் பவர் ஸ்டாராக திரையில் அவதாரமெடுத்தார். இவர் கட்சி தொடங்கிய போது சிரஞ்சீவியைப் போலவே தோற்கப் போகிறார் எனப் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும், பலகட்ட தோல்விகளுக்குப் பின்னர் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜனசேனா கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இப்போதும், பலரும் இவரது வீழ்ச்சி காலம் தொடங்கிவிட்டது என விமர்சிக்கத் தொடங்கினர். 

இந்த நிலையில், தற்போது 2024 தேர்தலில் அவர் பெற்றுள்ள வெற்றி பலரையும் வாயடைக்கச் செய்துள்ளது. வெற்றிபெற்ற பின்னர், தனது சகோதரரான நடிகர் சிரஞ்சீவி வீட்டிற்கு பவன் கல்யாண் சென்றார். அப்போது, சிரஞ்சீவி குடும்பத்தினர் ரோஜா மலர்களால் பவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பவன் கல்யாணை ஆரத்தழுவிய சிரஞ்சீவி, பிரம்மாண்ட மாலையை அவருக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கேக் வெட்டி தேர்தல் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்மூலம், தன்னை விமர்சித்தவர்களுக்கு பவன் கல்யாண் பதில் சொல்லிவிட்டார் என அவரது ரசிகர்களும் தொண்டர்களும் கூறினர்.

Pawan Kalyan became Deputy Chief Minister of Andhra Pradesh

இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார். தொடர்ந்து, சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவையில் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனசேனாவுக்கு மூன்று அமைச்சர் பதவிகளும், பாரதிய ஜனதாவுக்கு ஒரு பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அண்ணன் சறுக்கிய இடங்களில் தானும் விழுந்திவிடாமல், தனக்கான ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் தன்னை அரசியல் ஆளுமையாக கட்டமைத்து, இன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் பவன் கல்யான். இப்போது, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒற்றுமையாக சந்திரபாபுவும் பவன் கல்யாணும் இணைந்தே காணப்படுகின்றனர். இருப்பினும், இவர் இன்னும் சில மாதங்ககளில் சந்திரபாபு நாயுடுவுடன் அதிகாரத்திற்காக மோதக் கூடும். அப்போதுதான் ஆட்டமே இருக்கிறது என்கின்றனர் ஆந்திர அரசியலை உற்று நோக்குபவர்கள்.

 

Next Story

ஆந்திரா துணை முதல்வராகப் பதவியேற்ற பவன் கல்யாண்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
pawan Kalyan sworn in as Deputy Chief Minister of Andhra Pradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும்  வெற்றி பெற்றது.  

அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. 

அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராகவும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல்; சுற்றுச்சூழல், காடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் இன்று (19-06-24) ஆந்திராவில் உள்ள துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.  

Next Story

பயங்கர விபத்தால் இளைஞர் பலி; ஆந்திர எம்.பியின் மகள் அதிரடி கைது

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Andhra MP's daughter arrested for Youth happened in tragic accident

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று பெசன்ட் நகர் சாலையோர நடைபாதையில் படுத்திருந்தார். இவர் மது அருந்திவிட்டு போதையில் படுத்து உறங்கியதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார், சாலையோரம் படுத்திருந்த சூர்யா மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், காரை மறிக்க முயன்ற போது காரில் இருந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து காருடன் தப்பி சென்றனர். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த இளைஞர் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே காருடன் தப்பிச் சென்ற இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், பெசண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த பீடா மாதுரி (32) என்பவர் தான் காரை ஓட்டி வந்தது என தெரியவந்தது. மேலும், அவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி பீடா மஸ்தான் ராவின் மகள் எனவும் தெரியவந்தது. 

இதனையடுத்து, பீடா மாதுரி மீது விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் காரில் வந்த மற்றொரு பெண் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, இது பிணையில் வரக்கூடிய சட்டப்பிரிவு என்பதால் காவல் நிலைய பிணையில் பீடா மாதுரி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.