![salem collector office cm palanisamy press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/u2k_Nvqlag8c9Evy9KLYSETPqhi4Xna2G5n7EwKjhz8/1590218892/sites/default/files/inline-images/cm345_0.jpg)
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளுடன் மேட்டூர் அணை திறப்பு, குடிமராமத்து பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சேலம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, "அரசின் வழிமுறையை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது. வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தற்போது சிகிச்சை பெறுகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13,000 கரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. மருத்துவக்குழு ஆலோசனையின்படி கரோனாவைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்டாவில் கால்வாய்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புறநகர்ப் பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. ஆட்டோக்கள் இயக்கவும், சலூன் கடைகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைதானார். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அரசு மீது ஸ்டாலின் புகார் கூறுவது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை. ஆர்.எஸ்.பாரதி இழிவாகப் பேசியபோதே கட்சித் தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். ஏதோ விஞ்ஞானி போல ஆர்.எஸ்.பாரதி பத்திரிகை விளம்பரத்துக்காகப் புகார்களைக் கொடுக்கிறார். ஆர்.எஸ்.பாரதி தரும் புகார்களின் உண்மை தன்மையை ஊடகங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அரசின் இ-டெண்டரில் முறைகேடு நடப்பதாகக் கூறுவது பொய்; தமிழகம் கேட்ட தொகையில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழகத்தில் அரசின் நடவடிக்கையால் கரோனா பாதிப்பு சமூகப்பரவலாக மாறவில்லை.
இந்தியாவிலேயே அதிக கரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம்தான்; மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். கரோனா தடுப்பு பொது முடக்கம் நீடிக்கும் நிலையில், தமிழகத்தில் அதிக தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கப்படும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.