!['Sale of seeds without registration certificate will cancel license' - Deputy Director of Seed Inspection, Erode district warns](http://image.nakkheeran.in/cdn/farfuture/uVhp1ZQjNAdgkEpjtS_IQUe7NzEFD66A4awouFInPh0/1682173808/sites/default/files/inline-images/nm403.jpg)
பதிவுச்சான்று இல்லாத விதைகளை விற்றால் உரிமம் ரத்து என ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் பெ.சுமதி இதுகுறித்து விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லறை விதை விற்பனையாளர்கள், தரமான சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகிக்க வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம், தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவுச் சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகலை உற்பத்தியாளரிடம் பெற்று ஆய்வின்போது காண்பிக்க வேண்டும். புதிய ரகங்கள் இந்த பருவத்துக்கு ஏற்றவைதானா என்பதை அறிந்து கொள்முதல் செய்து விற்க வேண்டும்.
பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால் நட்டவுடன் விரைவில் கதிர் வருதல், கதிர் வராமல் இருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கொள்முதல் செய்த விதைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். சரியான சேமிப்பு முறைகளைக் கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது விதை விற்பனை தடை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை, கொள்முதல் பட்டியல், பதிவுச் சான்று, விற்பனை பட்டியல் ஆகிய ஆவணங்கள், பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். விதை சட்ட விதிகளை மீறுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.