Skip to main content

தலைவிரித்தாடும் குடிதண்ணீர் பஞ்சம்... புழுக்கள் நெளியும் தண்ணீரை வடிகட்டி குடிக்கும் கிராமமக்கள்

Published on 06/11/2019 | Edited on 06/11/2019


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், வக்கம்பட்டி ஊராட்சி, செம்பட்டி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் வக்கம் பட்டி, பழைய வக்கம்பட்டி, தெற்கு தெரு,எம்.ஜி.ஆர்.நகர், மாதா நகர், உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குறிப்பாக வக்கம்பட்டி ஊராட்சியில் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாலும், ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிதண்ணீரை எடுத்துவிடாமல் இருப்பதால் முப்பது முதல் நாற்பது நாட்களுக்கு ஒருமுறைதான் குடிதண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

 

The people of the village are worried about drinking water

 

இதனால் பொதுமக்கள் குடிப்பதற்காக ஊராட்சி நிர்வாகம் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிதண்ணீரை 200 லிட்டர் பிளாஸ்டிக் டிரம்களில் பிடித்து வைத்து பயன்படுத்துகின்றனர். இதனால் டிரம்களில் புழுக்கள் உண்டாகி வருகின்றன. பொதுமக்கள் துணி மூலம் புழுக்களை வடிகட்டி பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளனர். குறிப்பாக தெற்குதெரு பகுதியில் சாலை முழுவதும் நூற்றுக் கணக்கான டிரம்கள் தெருக்களை அடைத்தது போல் உள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள வடிகாலை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பாக யாரும் வருவதில்லை. பெரும்பாலும் ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் புகார் செய்ய முடியாத நிலை உள்ளது.

 

The people of the village are worried about drinking water


இது குறித்து வக்கம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ஸ்டெல்லாமேரி கூறுகையில், இப்பகுதியில் சாக்கடை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பலருக்கு மர்மக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆய்வுக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியனின் காலை பிடித்து கெஞ்சியும் கூட எங்களுக்கு நாற்பது நாட்களுக்கு ஒருமுறைதான் குடிக்க தண்ணீர் வருகிறது. அதனால் நாங்கள் டிரம்களில் பணம் கொடுத்து வாங்கி பிடித்து வைக்கும் தண்ணீர் புழு வைத்தாலும் கூட நாங்கள் அதை பயன்படுத்தும் நிலையில் உள்ளோம் என கண்ணீர் மல்க கூறினார். இதுகுறித்து நாங்கள் புகார் செய்தாலோ அல்லது மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநரிடம் கூறினாலோ நாற்பது நாட்களுக்கு ஒருமுறை வருகின்ற தண்ணீரையும் நிறுத்தி விடுவோம் என ஊராட்சி நிர்வாகத்தினர் மிரட்டுகின்றனர். என்றார்.

 

The people of the village are worried about drinking water

 

தெற்கு தெருவை சேர்ந்த அங்கயற்கண்ணி மற்றும் தனலெட்சுமி கூறுகையில், பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி செயலர் பால்ராஜிடம் புகார் செய்தும் அதை கண்டுகொள்வதில்லை. நாங்கள் தினசரி கூலி வேலைக்கு வெளியூர் சென்று விட்டு திரும்ப வரும்போது ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டிக்கிடக்கும் இதனால் நாங்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறோம். புழுக்கள் மிதந்தாலும் வடிகட்டி பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளோம் மேலும் இப்பகுதியில் சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்யாததால் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது என்றார்.  மாவட்ட ஆட்சியர் ஒருமுறையாவது எங்கள் வக்கம்பட்டி தெற்குதெரு பகுதிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தால்தான் எங்களின் குடிதண்ணீர் கஷ்டம் தெரியும் என கண்ணீர் மல்க கூறினார்கள்.

 

The people of the village are worried about drinking water

 

தமிழகம் முழுவதும் டெங்கு புழுக்களை கட்டுப்படுத்துங்கள் என தமிழக அரசு அறிவித்து வரும் நிலையில் வக்கம்பட்டி ஊராட்சி கிராம மக்கள் புழுக்கள் மிதக்கும் தண்ணீரை குடிக்கும் அவலநிலையில் உள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.