
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் டவுன் பகுதியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி ஜபரூல்லா(34). இவர், தொழில் ரீதியாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் தீபன்(32) என்பவரிடம் கடனாக சிறுக சிறுக சுமார் 22லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். சில மாதங்களாக வட்டியும் அசலும் தராத காரணத்தினால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளன. இதில் கோபமடைந்த தீபன், ஜபரூல்லா வீட்டிற்கு சென்று வீட்டின் ஆவணங்கள் எடுத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டை தனது பெயருக்கு எழுதி தர தீபன் ஜபரூல்லாவை மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து ஜபரூல்லா, ஆரணி அருகே பெரணமல்லூர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இதனையறிந்த தீபன், தனது நண்பர்களான அடையாளம் தெரியாத 4 நபர்களுடன் இன்னோவா காரில் சென்று தலைமறைவாக இருந்த ஜபரூல்லாவை கடுமையாக தாக்கி காரில் கடத்திச் சென்றுள்ளார். கம்மசமுத்திரம் மாதோப்பு பகுதியில் ஜபரூல்லாவை அடைத்து வைத்து பைப் மற்றம் கம்பு கையால் பலமாக தாக்கியுள்ளனர். பின்னர் பல இடங்களில், இன்னோவா காரில் அழைத்து சென்று மது அருந்தவும், கஞ்சா புகை பிடிக்க கூறியும் வற்புறுத்தி கொடுத்துள்ளனர். இறுதியாக ஆரணி டவுன் சூரியகுளம் அருகில் உள்ள தீபனின் உறவினர் வீட்டிற்கு நள்ளிரவில் அழைத்து வந்து அடைத்துள்ளனர்.
இது சம்மந்தமாக ஆரணி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆரணி டி.எஸ்.பி பாண்டீஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார், சூரியகுளம் பகுதியில் சல்லடை போட்டு வலைவீசி தேடினார்கள். பின்னர் ஓரு வீட்டு மேல் மாடியில் அடைத்து வைத்திருந்த ஜபரூல்லாவை போலீசார் மீட்டு, அடைத்து வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் அபிஷேக் என்பவரை கைது செய்து ஆரணி டவுன் காவல் நிலையத்து அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பெற்ற கடனை திருப்பி செலுத்தாத ஜபரூல்லாவை கடந்த 10 நாட்களாக பல்வேறு இடங்களில் சினிமா பட பாணியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தன. பின்னர் ஜபரூல்லாவை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் தலைமறைவான தீபன், வீட்டில் அடைத்து வைக்க வீட்டை அளித்த அபிஷேக் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான அடையாளம் தெரியாத 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கபட்ட ஜபரூல்லா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில், தன்னை நிர்வாணபடுத்தி தாக்கியும், கஞ்சா புகை பிடிக்க வற்புறுத்தியும் சுமார் 10 பேர் தன்னை பைப் மற்றும் தடியால் தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு தீபன்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.