Skip to main content

"ஒரே நாளில் நிரம்பும் அணை..." -மொத்த நீரும் வீணாகக் கடலில் கலக்கும்..! 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

  bhavanisagar  Dam -

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணை தான் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. மேலும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் என மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

 

தற்போது சென்ற மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஆங்காங்கே உள்ள சிற்றோடைகள் வழியாக வரும் தண்ணீர் மூலம் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

 

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் சென்ற நான்கு நாட்களில் மளமளவென உயர்ந்து இன்று மாலை 3 மணி நேர நிலவரப்படி அனையின் நீர்மட்டம் 96.85 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 39,617 கன அடியாக அதிகரித்துள்ளது. 

 

இந்த அணையிலிருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 400 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும் 500 கன அடி நீர் என மொத்தம் 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நாளை 8 ஆம் தேதி இரவுக்குள் அணை 100 அடியை எட்டிவிடும் என்றும் முழுகொள்ள வான 105 அடி 9 ஆம் தேதி நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை கரையோரங்களில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

http://onelink.to/nknapp

 

இதேபோல், சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள ஐயப்பன் கோவில் படித்துறை, விநாயகர் கோவில் படித்துறை கோட்டு வீரம் பாளையம், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் பவானி ஆற்றில் இறங்கி குளிக்கக் கூடாது என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

 

பவானிசாகர் அணை நிரம்பினால் அனைக்கு வரும் முழு நீரும் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படும் இது பவானி கூடுதுறையில் உள்ள காவேரி ஆற்றில் கலக்கும் இதனால் காவேரி கரையோரங்கள் வெள்ள அபாயம் ஏற்படுவதோடு மொத்த நீரும் வீணாகக் கடலில் போய் கலக்கும் சூழல் தான் உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.