Skip to main content

கோவையில் குட்கா தொழிற்சாலை: அரசு அதிகார மையத்திற்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை: ஈஸ்வரன் 

Published on 28/04/2018 | Edited on 28/04/2018
E. R. Eswaran


கோவை சூலூரில் குட்கா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகார மையத்திற்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 
 

கோவை சூலூரில் குட்கா தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளை கண்டுபிடித்து வெளிக்கொணர தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட உடன் இந்த குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. 
 

அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் ஒரு தொழிற்சாலை தொடர்ந்து நடத்த முடியாது. அவ்வளவு பெரிய தொழிற்சாலை தொடர்ந்து நடந்து கொண்டு இருந்திருக்கிறது. அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். யார் நம்மை கேட்க போகிறார்கள் என்ற தைரியத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்திருக்கலாம். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உடன் பயந்து கொண்டு தாங்களே கண்டுபிடிப்பது போல கண்டுபிடித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. 
 

தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட தொழிற்சாலைகள் அரசாங்கத்தில் உள்ள ஒருசிலரின் ஆதரவோடு செயல்பட்டுக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை தமிழக அரசிற்கு இருக்கிறது. தமிழகம் முழுவதும் பரிசோதனையை தீவிரப்படுத்தி குட்கா ஆலைகளை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்