Skip to main content

நடத்தையில் சந்தேகம்; ஆத்திரத்தில் மனைவி எடுத்த முடிவு

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Doubt in behavior; A decision taken by the wife in anger at madurai

மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (24) என்ற பெண்ணும் காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கும் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. 

இந்த நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். ராஜ்குமார் அடிக்கடி வேலைக்கு செல்லாததால் அவரின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மஞ்சுளா வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். வேலைக்கு சென்று வந்த நிலையில், மஞ்சுளாவின் நடத்தையிலும் சந்தேகம் அடைந்து ராஜ்குமார் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். கணவனின் நடவடிக்கையால் மஞ்சுளா மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று கூறப்படுகிறது. இதனால், ராஜ்குமாரை கொலை செய்துவிட மஞ்சுளா முடிவு செய்துள்ளார். 

அந்த வகையில், நேற்று முன் தினம் (17-12-23) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரின் கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். அவர் இறந்ததை உறுதி செய்த மஞ்சுளா, தனது கணவர் தனக்கு தானே கழுத்தை கயிற்றால் இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வாடிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, போலீசாரின் விசாரணைக்கு பயந்த மஞ்சுளா, கச்சைக்கட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். அப்போது அவர், தனது கணவரின் கழுத்தை கயிற்றால் கொலை செய்தது தான் தான் என்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர், வாடிப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், மஞ்சுளா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்த மஞ்சுளாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம்பெண்; முன்னாள் காதலனின் வெறிச்செயல்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Incident happened on A young woman preparing for marriage in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், டாடியா பகுதியைச் சேர்ந்தவர் காஜல் அஹிர்வார்(22). இவருக்கும், இளைஞர் ஒருவருக்கு நேற்று (23-06-24) திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணப்பெண்ணான காஜல் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு மேக்கப் போடுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள அழகு நிலையத்திற்கு தனது சகோதரியுடன் வந்தார். மேலும், அந்த அழகு நிலையத்திற்கு உள்ளே சென்று காஜல் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது, அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகத்தில் முகமூடி அணிந்து வெளியே நின்று கொண்டு, காஜலிடம் வெளியே வருமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர், ‘வெளியே வா காஜல், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய்’ என்று கூறியதாக கூறப்படுகிறது. 

ஆனாலும், அந்த பெண் வெளியே வர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு காஜலை சரமாரியாக சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த காஜல் மயங்கி கீழே விழுந்தார். இதனிடையே, காஜலை துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த காஜலின் சகோதரி, காஜலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காஜல் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இளம்பெண்ணை சுட்டுக்கொலை செய்தவர் தீபக்.  அந்தப் பெண் வசிக்கும் அதே ஊரில்தான் அவரும் வசித்து வந்துள்ளார். தீபக்கும், காஜலும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காஜலுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தீபக், காஜலை சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற தீபக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கள்ளச்சாராய வியாபாரி கொடுத்த வாக்குமூலம்; மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட உடல்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Confession given by liquor dealer; The body was exhumed again


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் கடந்த 18 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் விற்பனை செய்த சாராயத்தை வாங்கி குடித்துள்ளார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனால் மீண்டும் உடலை வீட்டுக்கு எடுத்து வந்த ஜெயமுருகனின் உறவினர்கள் அவரது உடலை மறுநாள் அடக்கம் செய்தனர். ஆனால் ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது அவருடைய வீட்டாருக்கு தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்த நிலையில் ராமர் என்பவரையு விசாரித்த போது அதே ஊரில் உயிரிழந்த ஜெயராமன், ஜெயமுருகன் உட்பட பலர் தன்னிடம் சாராயம் வாங்கிக் குடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனையடுத்து ஜெயராமன், ஜெயமுருகன் ஆகியோர் வீட்டிற்குச் சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால்தான் உயிரிழந்தார்களா என்பதை உறுதிசெய்ய உடல்கள் தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மதியம் வருவாய் வட்டாட்சியர் கமலக்கண்ணன், காவல் ஆய்வாளர் கந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.