!['Comparing the mentally challenged with Annamalai?'-Complaint at Police Commissioner's Office](http://image.nakkheeran.in/cdn/farfuture/YP98mwrb97ogy4Jyu2KF6RMi7m30yjwKDmw2rBd2cqo/1678081808/sites/default/files/inline-images/n223838_0.jpg)
தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல்குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ள நிலையில், அவர் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவராக பணியாற்றி வந்தவர் நிர்மல்குமார். இவர் நேற்று பாஜகவின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “உண்மையாக நேர்மையாக உழைத்தேன். வேதனை மட்டுமே மிச்சம். என்னால் முடிந்தவரை பல சங்கடங்களைக் கடந்து ஒன்றரை ஆண்டுகளாகப் பயணித்தேன். கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி தொண்டர்கள் எப்படி பயணிக்க முடியும். மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள யதார்த்தத்தை என்றும் உணர முடியாது. ஒரு அமைச்சரை பற்றி வெளியே விமர்சித்து விட்டு பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும். இடத்துக்கு ஏற்ப நடித்து ஏமாற்றிவரும் தலைமையைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் வேதனையடைந்ததுதான் மிச்சம். தொண்டர்களை மதிக்காதது, தான்தோன்றித்தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரைப் போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கிச் செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது” எனத் தெரிவித்திருந்தார். மேலும், பாஜகவிலிருந்து விலகி சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
!['Comparing the mentally challenged with Annamalai?'-Complaint at Police Commissioner's Office](http://image.nakkheeran.in/cdn/farfuture/-6lmzcOTp2fAQyQhzBoNy18uIo5Mqe7nlyfuIAnFM7U/1678081827/sites/default/files/inline-images/N223846.jpg)
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் அமைப்பை நடத்தி வரும் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்மல்குமார் மீது புகார் அளித்துள்ளார். கட்சியில் இருந்து விலகிய நிர்மல்குமார் தனது அறிக்கையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அண்ணாமலையுடன் ஒப்பிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.