Skip to main content

பனகல் அரசர் பிறந்த தினம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

Chief Minister M K Stalin's eulogy on the birthday of King Panagal

 

திராவிட இயக்கங்களுக்கும், திராவிட கட்சிகளுக்கும் முன்னோடியாக இருந்தது நீதிக்கட்சி. நீதிகட்சி அப்போதைய சென்னை மாகாணத்தை 1920 முதல் 1937 வரை ஆட்சி செய்தது. இதில் 1921ம் ஆண்டு முதல் 1926ம் ஆண்டுவரை பனகல் அரசர் என்று அழைக்கப்படும் பனங்கன்டி ராமராயநிங்கார் ஆட்சி செய்தார். இவருக்கு முன்பிருந்த சுப்புராயர் உடல்நலக்குறைவால் பதவி விலகியதால், அடுத்ததாக இவர் ஆட்சிக்கு வந்தார். 1923ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த இவர் 1926 வரை ஆட்சி செய்தார். 

 

இவரது ஆட்சிக்காலம் சமத்துவத்திற்கான ஆட்சிகாலம், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆட்சிக்காலம் என்றே சொல்லலாம். கல்வியில் இவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. இந்து அறநிலையத்துறை சட்டத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவந்தவர் இவர்தான். இந்த சட்டம் கோவில் நிர்வாகம், அர்ச்சனை உட்பட அனைத்தும் எங்களுக்கு சொந்தம் எனக்கூறிய ஒரு பிரிவினரிடமிருந்து மீட்டு, அனைவரும் வழிபடுவது உட்பட பல உரிமைகளை பெற்றுக்கொடுத்தது. அதன் மீட்சிதான் இந்து அறநிலையத்துறையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் வரை அனைத்தும். 

 

அடுத்து இவர் கொண்டுவந்தது இடஒதுக்கீடு சட்டத்தின் முதல்கட்டமான வகுப்புவாரி உரிமை சட்டம். இதன்மூலம் அரசுப் பணிகளில் அனைத்து சாதியினரும் பங்கேற்க வாய்ப்பு உருவானது. அனைவருக்கும் கல்வி கிடைத்தது. மேலும் அப்போது இருந்த, சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற சட்டத்தை நீக்கினார். காமராஜரை இன்றுவரை நாம் நினைவுகூறுவது அவரின் ஆட்சிகாலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முக்கியமான மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்ததற்காக. மதிய உணவு திட்டத்தை முதன்முதலில் கொண்டுவந்தவரும் இவரே. அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக இவரும் உறுதுணையாக இருந்தார்.  

 

தொழிற்சாலை திட்டத்தை கொண்டுவந்து சென்னை மாகாணத்தில் தொழிற்சாலை பெருகவும், அதே நேரத்தில் தொழிலாளர் பாதுகாப்பாய் இருக்கவும் ஆவணம் செய்தார். இதுதவிர மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை ஆதிதிராவிடர் என அழைக்க சட்டம் இயற்றினார். 1921லேயே பெண்களுக்கு வாக்குரிமைக்கு வழிவகை செய்தார். டி. நகர் பகுதிகள் உருவாக்கப்பட்டதற்கு முக்கியகாரணமாக இருந்தது ஆகியவை முக்கியமானது. இவைகளனைத்தையும் 1921 முதல் 1926 வரையிலான காலகட்டத்தில் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று (ஜூலை 9)  பனகல் அரசரின்  பிறந்த தினம் ஆகும் 

 

Chief Minister M K Stalin's eulogy on the birthday of King Panagal

 

இந்நிலையில் பனகல் அரசரின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “ திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அதிகாரத்தை நாம் அடைவதன் மூலம் நமது மக்களுக்கு நம்மால் எத்தகைய நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை, மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை, பெண்களுக்கு வாக்குரிமை, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற எண்ணற்ற புரட்சிகரத் திட்டங்களால் காட்டியவர் அவர்! பனகல் அரசர் பற்றிய துணைப்பாடக் கட்டுரைதான் பள்ளி மாணவராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாக விளங்கியது. "தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியார் போற்றிய பனகல் அரசர் வழிநடப்போம் தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற  அமைச்சர் ஐ.பெரியசாமி!  

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Minister I. Periyasamy congratulated the Chief Minister mk stalin
கோப்புப்படம்

கடந்த 20ஆம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தில் இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  முதல்நாள் கூட்டத்தொடர் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து  நேற்று  சட்டமன்ற கூட்டத்தொடரில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியின் மானிய  கோரிக்கையைச் சமர்ப்பித்தார். அதுபோல் மதியம் சமூக நலத்துறை அமைச்சர்  கீதாஜீவன் தனது துறை சார்ந்த மானிய கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.  

அதைத் தொடர்ந்து இன்று 3வது நாளான ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமியின் மானிய கோரிக்கை சமர்பிப்பதை யொட்டி கிரீன் சாலையில் உள்ள ரோஜா இல்லத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான  ஐ.பெரியசாமியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாநகர பகுதி  செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூர்கழக நிர்வாகிகள் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிகாலையிலேயே அமைச்சர் வீட்டிற்கு மாலைகள் சால்வைகளுடன் வந்தனர். இப்படி அமைச்சரை  வாழ்த்த வந்த கட்சிப் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் இல்லத்தில் காலை உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

Minister I. Periyasamy congratulated the Chief Minister mk stalin

அதன்பின் சரியாக 8.15 மணிக்க  அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு  கூடியிருந்த கட்சிப் பொறுப்பாளர்கள் எல்லாம் மாலை, சால்வைகளை கொடுத்து வாழ்த்து பெற்றனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி மானிய  கோரிக்கைச் சம்மந்தமாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நடப்பு ஆண்டில் தனது துறையில் நடைபெற்ற திட்டப்பணிகளையும், அடுத்த ஆண்டு வரக்கூடிய திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில்  தனது மானிய கோரிக்கை மூலம் சமர்ப்பிக்க இருக்கிறார். 

Next Story

கூடாரம் காலி; அடையாளத்தை இழக்கும் மாஞ்சோலை - அபலைகளுக்குக் கைகொடுக்கும் முதல்வர்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
plight of the people of Manjolai Estate

தலைமுறை வழியாய் 95 வருடங்கள் நெல்லை மாவட்டத்தின் அம்பை பகுதியின் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பி.பி.டி.சி. கம்பெனிக்கு இரவுபகல் பாராது விசுவாசமாய் உழைத்தவர்கள். அப்படிப்பட்ட மக்கள் அடுத்த வேளை உணவுக்கு, அவர்கள் தங்கள் பிள்ளைகளோடு என்ன செய்வார்கள் என்ற நன்றி உணர்வு இம்மியளவு கூட இல்லாமல் கடுமையாக நடந்து கொண்ட கார்ப்பரேட் கம்பெனி குத்தகை முடிவதற்கு இன்னும் நான்கு வருடங்கள் இருந்தபோதும் ஜூன் 17 முதல் கம்பெனி மூடப்படுகிறது.

plight of the people of Manjolai Estate

தொழிலாளர்களுக்கு வேலையில்லை. ஆரம்பத்தில் 25 சதவிகிதம் ஓய்வூதியத் தொகை. வீட்டைக் காலி செய்து சாவியை ஒப்படைத்தால்தான் மீதமுள்ள தொகை என்று ஐம்புலன்களையும் மூடிக்கொண்டு அறிவித்துவிட்டது. பிரபஞ்சத்தில் நடந்திராத கொடுமை.

எங்களின் திடீர் நிலைமைக்கேற்ப உதவுங்கள். நேரமே கொடுக்காமல் வெளியிட்ட அறிவிப்பால் சுருண்டு கிடக்கிறோம் என்று கார்ப்பரேட்டிடம் கெஞ்சியும் மன்றாடிய தொழிலாளர்களுக்கு பதிலில்லை. கண்ணீரே அவர்களின் வழிப்பாதையாக இருந்தது. கத்தி மீதிருக்கும் இந்த 3000 தொழிலாளர் குடும்பங்களின் நிலைமைகளை அரசு வரை கொண்டு சென்ற அரசியல் கட்சியினர் அம்மக்களின் நெருக்கடிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எங்களுக்கு மறுஜென்மம் அளியுங்கள் என்று தொழிலாளர்களும் அரசிடம் நிலைமையை தெளிவாக்கினர்.

plight of the people of Manjolai Estate

அதே சமயம் கார்ப்பரேட்டின் ‘வெளியேறு’ என்ற தகவலையறிந்த அரசும் உரிய நடவடிக்கையிலிறங்கியது. தாமதிக்காமல் இம்மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் அத்தனை குடும்பங்களுக்கும் உதவும் வகையில் இருப்பதற்கு வீடு, நிலம், வேலை, கல்வியைத் தொடர்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்கிற வகையில் அவர்களின் விருப்பத்தைத் தெரிவிக்க அத்தனை பேருக்கும் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மூலம் விண்ணப்ப படிவங்களை விநியோகித்து நிவாரணப் பணிகளை விரைவு படுத்தியிருக்கிறார். முதல்வரின் நடவடிக்கைகள் அம்மக்களின் நம்பிக்கையை வலுவாக்கியிருக்கிறது.

plight of the people of Manjolai Estate

ஆனாலும் தற்போதைய சூழலில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுகிற வகையில் தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதுவே எங்களின் குடும்பங்களை மேம்படுத்தும் என்று கோரிக்கை வைத்ததுடன், முதல்வர் தங்களுக்கான இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இன்னமும் அம்மக்களின் மனதில் நிலை கொண்டிருப்பதை அறியமுடிந்தது.

plight of the people of Manjolai Estate

வனத்துறையினர் மூலம் விநியோகிக்கப்பட்ட அந்த விண்ணப்பப் படிவத்தில், தேயிலை பறிப்பவரா, மேற்பார்வையாளரா அல்லது மற்ற வேலைபார்ப்பவரா, அவர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள், எந்தப் பஞ்சாயத்தில் வசிப்பவர், குடும்ப அட்டை எண், எந்த வருடத்தில் தேயிலை தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தார், குழந்தைகளின் எண்ணிக்கை கல்வியின் நிலை, விருப்ப ஓய்வூதிய திட்டத்தில் கையெழுத்திட்டவரா, அரசிடமிருந்து எந்த விதமான உதவியை எதிர்பார்க்கிறார், நிலமாக உதவியா, அரசு ஒதுக்கீடு செய்யும் வீடா? இங்கிருந்து வெளியே சென்ற பிறகு எந்த ஊரில் அல்லது கிராமத்தில் குடியேற விரும்புகிறார்கள் உட்பட அனைத்து விபரங்களும் பூர்த்தி செய்து விரைவாகக் கேட்கப்பட்டுள்ளது. அம்மக்களின் மறு வாழ்வே முக்கியம் என்றும் அதிகாரிகளின் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

நாம் மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெட்டி எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்ததில் அங்கு நடப்பவைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மன நிலைபற்றியும் நுணுக்கமாகவே கேட்டறிந்ததில், தொழிலாள மக்களின் மனதில் இனம் புரியாத அச்சமும் பதட்டமுமிருப்பதைக் காண முடிந்தது. கம்பெனியின் திட்டவட்ட அறிவிப்பின்படி பல தொழிலாளர்கள் தங்களின் இருப்பிடங்களைக் காலி செய்து கொண்டிருந்தபோது கூட அவர்களே அறியாமல் கண்ணீர் பொத்துக் கொண்டு கிளம்பியது நெருடலாக இருந்தது.

plight of the people of Manjolai Estate
துரைப்பாண்டியன்

“எதிர்ப்பாக்காத அறிவிப்ப சொல்லிருச்சி கம்பெனி. பித்துப் புடிச்சுப் போயி நிக்கோம்யா. இத்தன வருஷமா இதே வேலையச் செஞ்சு பழக்கப்பட்ட நாங்க வேற தொழில செய்ய முடியுமா? மனசும் ஒடம்பும் ஒத்துழைக்குமா தெரியல. ஆனைமுடி, வால்பாறை எஸ்டேட்டுக்கு வாங்கன்றாக. அங்க அத்தன சுலபமா குடி பெயரமுடியாதுய்யா. அதனால தாம் இத அரசு ஏத்து நடத்துனா எங்களுக்கு உசுரு கெடச்சமாதிரின்றோம்யா...” என்றார் தளர்ந்த குரலில் குதிரைவெட்டி எஸ்டேட் தொழிலாளியான துரைப்பாண்டியன்.

plight of the people of Manjolai Estate
சமுத்திரக்கனி

மாஞ்சோலையின் சமுத்திரக்கனியோ பதறுகிறார். “நா பொறந்தது வளர்ந்தது வால்பாறை எஸ்டேட்ல தான். அங்க கல்யாணம் முடிஞ்சி 23 வயசுல இங்க வந்தேம்யா. 24 வருஷமா இங்க வேல பாத்து வாரேன். எங்க குடும்பத்து பூர்வீகம் கடையநல்லூர். வால்பாறையிலயும் இங்கயும் ஒரே மேனேஜ்மெண்ட் தான். காலி பண்ணுங்கன்னு கம்பெனி திடீர்னு சொன்னதுனால இனிமே என்ன பண்றதுன்னு தவிப்பில இருக்கோம். கம்பெனி கூட எங்க கிராஜூட்டி கணக்க சரியா சொல்லல. இனிமே எங்க புள்ளைங்க வாழ்வாதாரம் என்னாகுமோன்னு தெரியல. ஏற்கனவே நடக்குற தேயில தொழில்தான. அரசாங்கம் என்னயப் போல தொழிலாளிகளுக்கு எது அவசியம்னு நல்ல முடிவு எடுக்கும்ற நம்பிக்கை மட்டும் எங்கள விட்டுப் போகல..” என்றார் திடமாக.

ஏற்றுக் கொள்ள சிரமப்படுகிற புதிய சூழலை உருவாக்குவதை விட பழகிப் போன வாழ்வாதாரத்தை சீர் படுத்துவதே மேல், என்பதே மாஞ்சோலையின் மனவோட்டமாக இருக்கிறது.