![Youth arrested for selling cannabis](http://image.nakkheeran.in/cdn/farfuture/rrPoZiVLP1x-Xem24fHkdA8uO-B5Pdnp5k0MIRqwjyg/1719080546/sites/default/files/inline-images/a72285.jpg)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு, கருங்கல்பாளையம் எம்ஜிஆர் நகர் சமுதாய கூடம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனையில் பாசில் என்கிற பப்பாளி (27) என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.