
தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி காலை 09.30 மணிக்கு வெளியாகி இருந்தது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்தனர்.
தொடர்ந்து இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அட்டவணை மே 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு வரும் மே 16ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றும், தனித்தேர்வர்கள் மாவட்ட சேவை மையங்களுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், +2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று (19-06-24) பதிவிறக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, ‘பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிய வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.