புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் தங்கசாமி. தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சென்று அரசு மற்றும் தனியார் விழாக்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு விழாக்களை தொடங்கி வைப்பார்.
இவரால் நடப்பட்ட பல லட்சம் மரங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. அவரது பேரன் தமிழழகன் (வயது 13). சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 7- ம் வகுப்பு படிக்கிறான். இந்த மாணவன் தனது ஒவ்வொரு பிறந்த நாளை கொண்டாடும் போதும் சக மாணவர்களுக்கு வழக்கமாக கொடுக்கும் சாக்லெட், இனிப்புகளை கொடுப்பதில்லை. மாறாக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரக்கன்று கொடுத்து வருகிறார். நாளை பிப்ரவரி 1ந் தேதி அவரது பிறந்த நாள். ஆனால் நாளை பள்ளி விடுமுறை என்பதால் இன்றே பள்ளியில் தனது பிறந்த நாளை கொண்டாடிய மாணவன்.. சுமார் 250 மரக்கன்றுகளை சக மாணவ, மாணவிகளுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.
![birthday gift no sweets provide trees in school student pudukkottai](http://image.nakkheeran.in/cdn/farfuture/8htmbFTmmI9LPT63_pD1KkKTtDFCKiEFJViJ5PHZReg/1580486893/sites/default/files/inline-images/trees.jpg)
இது குறித்து மாணவன் கூறும்போது, "எனது தாத்தா மரம் தங்கச்சாமி தமிழ்நாடு முழுவதும் சென்று மரக்கன்றுகளை நட்டு வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடந்த சில வருடங்களாக எனது தந்தை மரம் தங்க.கண்ணன் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். அதனால் நான் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சக மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளையே இனிப்பாக வழங்கி வருகிறேன். அதேபோல எனது தங்கை பிறந்த நாளுக்கும் மரக்கன்றுகள் தான் இனிப்பு.
கடந்த ஆண்டுகளின் நண்பர்களுக்கு கொடுத்த பிறந்த நாள் மரக்கன்றுகள் அவர்களின் வீடுகளின் வளர்ந்து பலன் கொடுக்க தொடங்கிவிட்டது. இனிமேலும் ஒவ்வொரு மாணவரும் தனது பிறந்த நாளில் சக மாணவர்களுக்கு மரக்கன்றுகள், விதைப் பந்துகள் வழங்கி கொண்டாடினால் விரைவில் தமிழ்நாடு மரங்கள் அடந்த கிராமங்கள் நிறைந்த மாநிலமாக மாற்ற முடியும்" என்றார்.