Skip to main content

நன்றி தெரிவித்த ட்ரம்ப்புக்குப் பிரதமர் மோடியின் பதில்...

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000 ஐ கடந்துள்ளது.இந்நிலையில் கரோனா தடுப்பு மருந்தாக அமெரிக்கா மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரபூர்வமாக அங்கீகரித்த ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கச் சம்மதித்துள்ளதற்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். 

 

trumo thanked india for its decision to export hcq

 

 

மருத்துவ ஊழியர்கள் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்த நிலையில்,இம்மருந்தினை தங்களுக்கு இந்தியா வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிடம் கோரிக்கை வைத்தார்.மேலும், மருந்தை அனுப்பாவிட்டால் கடமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார். உலகம் முழுவதிலும் விற்பனையாகும் இந்த ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தில் 70 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் சூழலில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியத் தேவைக்குப் போக, கூடுதல் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது.

இந்தியாவின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "அசாதாரண நேரங்களுக்கு நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. HCQ குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி.இதனை எப்போதும் மறக்க மாட்டேன்.இந்தப் போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த மனித இனத்திற்கே உதவி புரிந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
 

http://onelink.to/nknapp


ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள பிரதமர் மோடி, "உங்களுடைய கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன்.இது போன்ற நேரங்கள்தான் நண்பர்களை நெருக்கமாக்குகின்றன. இந்தியா-அமெரிக்கா நட்பு முன்னெப்போதையும் விட இப்போது வலுவானதாக உள்ளது. COVID-19 க்கு எதிரான மனிதக்குலத்தின் போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும்.இதை நாம் ஒன்றாக வெல்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்