உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க மருந்தகத்திற்குச் சென்றுவந்த இளைஞரை போலீஸார் தாக்கியதில், அந்த இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், சத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முகமது கவுஸ் (29) என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியின்றி அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, இன்று காலை சத்தனப்பள்ளி வாகனச் சோதனைச் சாவடி அருகே உள்ள ஒரு மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கி வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த போலீஸார், ஊரடங்கை மீறி வெளியே வந்ததற்கான காரணத்தைக் கேட்டுள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதற்காக மருந்து வாங்க வந்ததாகவும் கவுஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனைக் கேட்காத போலீஸார், கவுஸை தாக்கியுள்ளார். காவலர்கள் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்து, பின்னர் சத்தனப்பள்ளி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியறிந்து மருத்துவமனை முன்பு கூடிய அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞரைத் தாக்கிய மூன்று போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.