Skip to main content

8 வழிச்சாலை அரசாணை எரிப்பு! – போலீஸ் முகத்தில் கரி பூசிய தோழர்கள்!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
go born


சென்னை - சேலம் 8 வழிச்சாலையை எதிர்த்து இன்று திருவண்ணாமலையில், அரசாணை எரிப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்திருந்தது திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து அக்கட்சி தோழர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். போராட்டம் நடைபெறும் பகுதி என காவல்துறையினரிடம் சிபிஎம் தெரிவித்திருந்த அறிவொளிபூங்கா முன்பு 100 போலீஸாரை குவித்து வைத்திருந்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி, அதிரடிப்படையினர் 30 பேருடன், வேறு எங்கும் போராட்டம் நடத்திவிடக்கூடாது என நகரத்தை சுற்றி சுற்றி வலம் வந்தார்.

காலை 10 மணியளவில் நகல் எரிப்பு போராட்டத்துக்கு அறிவொளி பூங்கா அருகே சிபிஎம் கட்சியினர் ஒவ்வொருவராக வரத்துவங்கினர். அவர்களை ஏ.டி.எஸ்.பி அசோக்குமார் தலைமையிலான போலீஸ் படை, காரணம் எதுவும் சொல்லாமல் இழுத்து வந்து கைது செய்தது. சிபிஎம் கட்சியின் மகளிர் அமைப்பின் நிர்வாகி ஒருக்கடை முன்பு அமர்ந்திருந்தவரையும் இழுத்து வந்து கைது செய்ய பெண் காவலர்களிடம் எதுக்கு இழுக்கறிங்க என சண்டையிட்டார்.

அதேநேரம் சிபிஎம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வீரபத்திரன் தனது இருசக்கர வாகனத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வர ஒரு இன்ஸ்பெக்டர் அவர் கையை பிடித்து இழுத்தார். கையை முதல்ல விடுங்க, நான் ஒடிப்போறாதா இருந்தா இங்க ஏன் வரப்போறன். நானே கைதாகிறேன் என்றவரை மீண்டும் கையை பிடித்து இழுக்க தகராறானது. இதைப்பார்த்த ஏ.டி.எஸ்.பி, அவரை ஏன் இழுக்கிங்க விடுங்க அவரே வருவார் என்றபின் வீரபத்திரன் போலீஸ் வேனில் ஏறினார். 11 மணி வரை இப்படி கைதுகள் நடைபெற்றுக்கொண்டே இருந்தன. இவர்களை ஒரு தனியார் மண்டபத்தில் கொண்டும்போய் அடைத்தனர்.

 

 

மதியம் 11.45 மணிக்கு, மாநில நிர்வாகி ரவீந்திரன் தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பலராமன் முன்னிலையில் திருவண்ணாமலை எம்.எல்.ஏ அலுவலகம் எதிரே திடீரென குழுமிய சிபிஎம் கட்சியினர் 50 பேர், 8 வழிச்சாலை அரசாணையை எரித்தப்படி நடுச்சாலையில் வந்து நின்று மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிராகவும், மாநிலத்தை ஆளும் அதிமுகவின் எடப்பாடி அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த திடீர் அரசாணை எரிப்பை கேள்விப்பட்டு அதிர்ச்சியான போலீஸார் அறிவொளி பூங்கா அருகில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள எம்.எல்.ஏ அலுவலக பகுதிக்கு ஓடிவந்தனர். நகல் எரிப்பில் ஈடுப்பட்டவர்களை எஸ்.ஐக்கள் தாக்க தொடங்க அவர்களை தடுத்தனர் இளந்தோழர்கள். போராட்டக்காரர்களின் கைகளில் இருந்த அரசாணை காப்பிகளை பிடுங்கினர் போலீஸார், அதோடு அவர்கள் வைத்திருந்த பேனரையும் பிடித்து இழுக்க பெரும் தள்ளுமுள்ளே உருவானது. பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை இழுத்துச்சென்று கைது செய்து வேனில் ஏற்றியது போலீஸ். இதனால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நூற்றுக்கும் அதிகமான போலீஸாரை குவித்தும், எஸ்.பியே நகரை வலம் வந்தும், போலீஸாரின் திட்டத்தை தவிடுபொடியாக்கி 50 தோழர்கள் அரசாணையை எரித்து போலீஸாரின் முகத்தில் கரியை பூசினர்.

சார்ந்த செய்திகள்